ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!

அதிமுகவில் அடுத்த அதிரடி; ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.முக தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்? கட்சியினர் புகார் குழு அமைத்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை தயக்கம் காட்டும் எடப்பாடி பழனிசாமி, ரகசிய ஆலோசனையில் ஓபிஎஸ்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை நீடித்து வந்த நிலையில், ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், புகார்கள் எனக் கட்சிக்குள் பலரும் தங்களது கருத்துகளை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.  அதாவது, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் செலவு ஆகிய இரண்டு விஷயங்களில் பெரிதும் கோட்டை விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா தலைமை பொறுப்பில் இருந்த போது, வேட்பாளர்களிடம் நேரடியாக பணம் வழங்கப்படாது. குழு அமைத்து அவர்களின் மூலம் தான் செலவு செய்யப்படும். ஆனால் எடப்பாடி தலைமையில் வேட்பாளர்களுக்கு நேரடியாக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சரியாக செலவு செய்தார்களா என்பதை கவனிக்க பொறுப்பாளர்களை நியமிக்காமல் விட்டுவிட்டனர்.

மேலும் அமைச்சரவையில் இடம்பிடிக்க மாவட்டத்தில் எதிர் கோஷ்டியினராக இருப்பவர்களை ஜெயிக்க விடாமல் சில அமைச்சர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக திமுகவினருடன் கைகோர்த்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்துள்ளார்

அதாவது, தோல்விக்கான காரணங்களை ஆராய மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைத்து வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் தரும் அறிக்கையை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இதையடுத்து தோல்விக்கு காரணமான நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் மாவட்ட செயலாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.

இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது சரிப்பட்டு வராது என்று நினைத்த ஓ.பன்னீர்செல்வம் தாமாக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தோல்வி அடைந்த வேட்பாளர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் ஈபிஎஸ்சிற்கு அழுத்தம் கொடுக்க ஓபிஎஸ்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஒரே நபர் பல பதவிகளை வகிப்பதால் கட்சி பலவீனமடையும் என்று அதிமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஒருவருக்கு ஒரு பதவி என பகிர்ந்தளித்து வேலை செய்தால் கட்சி பலம் பெறும். செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அடுத்த ஆட்சி நிச்சயம் கைவசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.