திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்பட 10 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர்,மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவினாலும், அதிமுகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் பரமகுடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் திமுக வசமானது.
அரியலூர் மாவட்டத்தின் 2 தொகுதியிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
அதே நேரம் கொங்கு மண்டலத்தின் கோவை மாவட்டத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் உட்பட 10 தொகுதிகளிலும் அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அதேபோல, தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று கைப்பற்றியுள்ளனர்.