ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகும் வேலுமணி ? பாஜக புண்ணியத்தில் !

ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இவருக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்ததுங்கிறதுக்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்ணாலும், அவருடைய வழக்கில மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியிருக்குது.!

அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தப்போ சென்னை, கோவை இரண்டு மாநகராட்சிகளிலும் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது.

மேலும், ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்லேருந்து டெண்டர்கள் கேட்கப்பட்டதையும் அது குறிப்பிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தான் டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்தது பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டிருக்குது., வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்ங்கிற ஒரோ காரணத்துககாக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இதில், பல கட்டங்களில் பெரும் பணம் விளையாடி உள்ளது. தார்ச் சாலை போடுவதில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்து கொடுத்திருக்காங்க. மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் ஊழல், அரசு நிலத்தை ஆக்கிரமித்து அம்மா ஐ.ஏ.எஸ் அகடாமி நடத்திய ஊழல்.. என பல முறைகேடுகளின் பட்டியலை அறப்போர் இயக்கம் விலாவாரியாக தெரிவித்து இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தினாங்க. அந்தச் சோதனையில் 11 கிலோவுக்கும் அதிகமான தங்கம், 118 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 34 லட்சம் கிரிப்டோ கரன்ஸி முதலீடு, ரொக்கமாக பல லட்சங்கள் சிக்கின. இவை எல்லாம் அவர் செய்த ஊழல்களுக்கு சிறு துளிகளே…! ஆனாலும், கம்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களையும் கைபற்றி கொண்டு போனாங்க. வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்கும் பதியப்பட்டது.

இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஊழல் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக – தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக – மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜரானதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி கொடுத்தது..? என நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சியும், வியப்பும் தெரிந்தது.

தமிழக அரசின் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ”இது முறையற்றது. இந்த மாதிரி வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜராவதற்கு மத்திய அரசு தந்துள்ள அனுமதியை ரத்து செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்”னு சண்முக சுந்தரம் நீதிமன்றத்தில் சொல்லியிருந்தாரு.

வேலுமணி நாடறிந்த அராஜகமான ஊழல் பேர்வழி! ‘அவர் எப்படியெல்லாம் ஊழல் செய்தாருன்னு கோவைவாசிகளிடம் கேட்டால் கொட்டித் தீர்ப்பார்கள்!

கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு கொடுத்தது.

தமிழக உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறைகளின் கீழ் உள்ள அலுவலகங்களில் தினசரி லஞ்சம் வசூலித்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கப்பம் கட்டணும்ங்கிற கறார் உத்தரவுகள்!

பல ஆண்டுகளாக மாநகராட்சிகளில் துப்புரவு பணி செய்த எளிய சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த லட்சங்களில் லஞ்சம் பெற்றது!

இதை வசூலிக்க மாவட்டந்தோறும் பயணம் செய்து கோடிக்கணக்கில் கப்பத்தொகையை வசூலிப்பதற்காகவே பெரும் அடியாள் பட்டாளம்…!

டாஸ்மாக் மதுபானங்களை கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வது…!

என சட்ட விரோத, சமூக விரோத சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தான் நம்ம எஸ்.பி. வேலுமணி!

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள 59 இடங்களில் சோதனை நடத்தி ஓராண்டு ஆகியும், அவரை மாநில திமுக அரசு கைது செய்ய முடியாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மத்திய அரசு மூலமாக அவர் செய்து கொண்டிருக்கும் ‘லாபி’ என்றும் சொல்லப்பட்டது.

இந்துத்துவர்களின் நேசத்திற்கும், நெருக்கத்திற்கும் உரியவாரான வேலுமணி, அவர்களின் ஆலோசனைப்படியே ‘சத்ரு சம்கார’ யாகங்கள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்கு உரியது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. பொதுப் பணத்தை அசுர பலத்துடன் ஈவு இரக்கமின்றி ‘ஸ்வாகா’ செய்துள்ளார்!

இப்படிப்பட்ட வேலுமணிக்கு பின்னணியில் சர்வ அதிகாரம் படைத்த மத்திய அரசு இருக்குதோ,பாஜகவின் கரிசனத்திற்கு உரியவராக அவர் இருக்கிறாராரோ..,

இதற்கு அடையாளமாகத் தான் மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் வேலுமணி சார்பாக ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டதோங்கிற சந்தேகங்கள் பலமாக எழுந்திருக்குது.”மோடி ஊழலுக்கு எதிரானவர்! பாஜக அரசில் ஊழலுக்கே இடமில்லை..” என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இது வெறும் பில்டப் தான்னுஇப்ப தான் தெரிய வருது. அப்படீன்னா வேலுமணியை காப்பாத்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலே களம் இறங்குனதுக்கு என்ன காரணம்ங்கிற கேள்வியை தவிர்க்க முடியலை.

இதப்பத்தி ஒரு சட்ட வல்லுனர் என்ன சொல்றாருன்னா”சட்டப்படி பார்த்தால், இப்படிச் செய்ய தடையில்லை. ஆனால், தார்மீக ரீதியாக பார்க்கும் போது இது மிகப் பெரிய தவறு. மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கான வேலையல்ல இது. ஆனால், மத்திய அரசின் அணுசரணை இல்லாமல் அவர் நீதிமன்றத்துல ஆஜராகியிருக்க முடியாது. ஒரு வகையில் பாஜக அரசு இதில் அம்பலப்பட்டுவிட்டதுன்னு கருதலாம்ங்கிறார்.