184 இடங்களாமே.. “ஓவர்டேக்” செய்த பெண்கள்.. வளைத்து வளைத்து குத்தி.. கலக்கத்தில் அதிமுக, திமுக..!*
மொத்தமாகவே தமிழகத்தில் இந்த முறை வாக்கு சதவீதம் குறைவாக பதிவானதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், 234 தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.. இதனால், இவர்கள் எல்லாம் யாருக்கு ஓட்டு போட்டிருப்பார்கள் என்று தெரியாததால், அதிமுக, திமுவும் கலங்கி போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை தேர்தல் பலவித செய்திகளை தாங்கி வந்துள்ளது.. தமிழகத்தில் வழக்கம்போலவே வாக்குகள் குறைவாக பதிவாகி இருக்கிறது.. ஆனால், 10 அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளில் நல்ல வாக்குப்பதிவு பதிவாகி இருக்கிறது.
இதில் அதிர்ச்சியை தரும் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவானது, ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி, மற்றும் சீமானின் திருவொற்றியூர் தொகுதி ஆகும்.. பலருக்கு எப்படி ஓட்டுப்போட வேண்டும் என்று தெரியாமல் திரும்பி சென்றதாகவும், பூத் சிலிப் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், காரணம் சொல்லப்பட்டது. இருந்தாலும், வாக்களிக்கும் மனோபாவம் குறைந்து விட்டதையே இந்த வாக்குபதிவு சதவீதம் எடுத்து காட்டி உள்ளது.
இந்நிலையில், இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் மொத்தம் 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 6.28 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. ஆனால், இந்த தேர்தலில், 4.57 கோடி வாக்காளர்கள்தான் ஓட்டுப்போட்டனர். இதில்தான் ஆண்களை விட, 5.68 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது..
அதாவது, 184 தொகுதிகளில், ஆண்களை விட பெண்கள்தான் ஓட்டு போட்டுள்ளனர்… அந்த வகையில் இந்த முறை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களே இந்த பெண்கள்தான். கடந்த முறை நடந்த எம்பி தேர்தல், மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்களில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் பெண்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருந்தனர்..
மற்ற தொகுதிகள் எல்லாவற்றிலும் பெண் வாக்காளர்களே அதிகம் இருந்தாலும், வாக்குப்பதிவின்போது, திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், கோவை ஆகிய தொகுதிகளில், பெண்களை விட ஆண்கள் அதிகம் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 18 சட்டசபை தொகுதிகளிலும், ஆண் வாக்காளர்களே அதிகம் இருந்த நிலையில், 13 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்குகளை செலுத்தினர்.
இந்த 2 தேர்தல்களிலும் எம்பி தேர்தல் திமுகவுக்கும், இடைத்தேர்தல் அதிமுகவுக்கும் சாதகத்தை பெற்று தந்தன. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.. அந்த வகையில், இவர்கள் யாருக்கு இந்த முறை ஓட்டு போட்டிருப்பார்கள்? இது எந்த கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடமும், ஒருவித கலக்கம் அதிமுக, திமுகவிடமும் நிலவி வருகிறது.
