இயக்குநர் சசியின் பிச்சைக்காரன் படம் வரை அம்மாவை தெய்வமாகவே மதித்து அவங்களுக்கும் ஒரு மனசு இருக்குமேன்னு பார்க்காம விட்ட நிலையில், அம்மாவும் பெண் தான். அப்பா இல்லை என்றால் அவளுக்கும் ஒரு துணை தேவை என்பதை இயக்குநர் சசி எடுத்து சொல்லிய விதம் சிறப்பு.கள்ளக்குறிச்சி அருகே நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி . மறுமணம் செய்வது என்ன புதிய விஷயமா? ஊரில் எத்தனையோ கணவனை இழந்த பெண்கள் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே எதுக்கு இப்போ இந்த படம் என்று நினைப்பவர்களுக்கு, மறுமணம் செய்தவர்களையும் செய்ய நினைப்பவர்களையும் மனுஷியாக இந்த சமூகம் பார்க்க வேண்டும் என்றும் அந்த குறைபாடு இன்றும் இருப்பதால் தான் இப்படியொரு படத்தை சசி கொடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
உண்மையாகவே செல்வி என்பவருக்கு அவரது மகன்கள் ஊர் மற்றும் உறவினரால் ஏற்படும் பிரச்னைகள் பலவற்றை கடந்து எப்படி மறுமணம் செய்து வைத்தனர் என்கிற கதையை எந்தளவுக்கு தியேட்டர் வரும் ரசிகர்களுக்கு போரடிக்காமலும், அதே நேரத்தில் சமூகத்தில் மாற்றத்துக்கான ஒரு சிறு விதையாக இதை தூவ முடியுமோ தூவலாமே என்கிற நல்ல உள்ளத்திற்காகவே இந்த படத்தை இயக்கிய சசிக்கும் படத்தை தயாரித்து நடித்த விஜய் ஆண்டனிக்கும் மனதார பாராட்டுகள்!
இந்த படத்தில் தான் நிஜமாகவே விஜய் ஆன்டனி நடித்திருக்கிறார். இரு மகன்களை பெற்ற பின்னர், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்து குழந்தைகளை பாதுகாக்க தன்னந்தனி மனுஷியாக வேலை செய்து, தனியாக இருக்கும் விதவையை கள்ளத்தனமாக படுக்கைக்கு அழைக்கும் ஊர் பெரியவர்கள் என்கிற போர்வையில் சுற்றித் திரியும் மனித மிருகங்களிடம் இருந்து தப்பித்து வாழும் செல்வியாக சுவாசிகா படம் முழுவதும் உயிரை கொடுத்து நடித்துள்ளார்
மறுமணம் செய்து கொள்ள அம்மா விரும்புவதை அறிந்து ஆத்திரமடையும் மூத்த மகன் பாஸ்கர் (அஜய் திஷன்) அதன் பின்னர் அம்மா வீட்டில் பொறிக்குள் அடைபட்ட எலியாக இருப்பதை அறிந்து மனசு மாறி திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, அதற்கு தம்பியின் காதல் பஞ்சாயத்து தடையாக இருக்க, அதையும் கடந்து போராடுகிறார்கள். உறவினர்களும் ஊர்க்காரர்களும் எந்தளவுக்கு இந்த விஷயத்துக்கு எதிரிகளாக இருக்கின்றனர் என்பதும் சொந்த அண்ணனே தங்கையை கொலை செய்ய துணியும் மோசமான சம்பவத்தைக் கடந்து இறுதியில் என்ன ஆனது என்பது தான் நூறு சாமி படத்தின் கதை.ஆரம்பத்தில் ழகரம் அறக்கட்டளையில் மகன்களை சேர்த்து விட நினைக்கும் சுவாசிகாவை பிரிந்து செல்ல மாட்டேன் என அழுது அடம்பிடித்து அம்மாவுடனே ஓடி வரும் மகன்களை கட்டியணைக்கும் காட்சியில் இருந்து சுவாசிகா படத்தில் சாவித்ரியாகவே நடிப்பில் மிரட்டுகிறார்.
பொட்டு வைக்காத பெண்ணிடம் பாஸ்போர்ட் வாங்குவதைக் கூட அபசகுனமாகப் பார்க்கும் காரணத்தால் வேலை செய்கிற இடத்தில் பொட்டு வைத்துக் கொள்கிறார். மறுமணம் செய்துக் கொள்ள நினைக்கும் இடத்திலும் மகனிடம் அசிங்கப்படும் இடத்திலும், விஜய் ஆண்டனியுடன் காதலில் விழும் இடத்திலும் அவரது நடிப்பு அபாரம்.
மகன்களாக நடித்த இருவரும் உண்மையாகவே படத்தோடு ஒன்றிப்போய் தாய் பாசத்தில் எல்லாரையும் மிஞ்சி விடுகின்றனர். தங்களது காதல் வாழ்க்கை பாழாய் போனாலும் பரவாயில்லை அம்மாவுக்காக நிற்கும் மகன்களின் முடிவு ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் காட்சிகள் என படத்தில் ஏகப்பட்ட சிறப்பான விஷயங்களை இயக்குநர் சசி அடுக்கிக் கொண்டே போகிறார். ஒரு பெண்ணை எப்படி நேசிக்க வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என தனது வயதான ஜாக்கெட் அணியாத பெரியம்மாவை குளிப்பாட்டும் காட்சியில் தொடங்கி, நீ என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும், என் பெரியம்மாவை நானே பார்த்துக்கிறேன் என சொல்கிற இடத்தில் விஜய் ஆண்டனி 2ம் பாதியில் நிஜ ஏழுமலையாக வாழ்ந்திருக்கிறார்.
மோசமான சபலம் நிறைந்த ஊர் பெரியவராக வரும் பச்சை பெருமாள் (பாலாஜி சக்திவேல்) கதாபாத்திரத்தை விட தங்கச்சி டீ போடும்மான்னு சொல்லிட்டு கழுத்தை நெறிக்கும் ஆணவ வெறி பிடித்த அண்ணன் கதாபாத்திரத்தில் கருணாஸ் பயமுறுத்துகிறார். எப்படியாவது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்து விட வேண்டும் என போராடும் பாஸ்கரின் செயல்கள் எல்லாமே யதார்த்தமாகவும் நேர்மையாகவும் தெரிவது படத்திற்குள் இருக்கும் அழகான ப்ளஸ் பாய்ண்ட்ஸ். இது எல்லாருடைய மனங்களிலும் இருந்தால் இங்கே சண்டைகள், பிரச்னைகள் என்பதற்கே இடமில்லாமல் போய் விடும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் காட்டுகிறது.
மறுமணம் தொடர்பான உண்மைக் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை எந்தளவுக்கு சுவாரஸ்யம் குறையாமலும் அதே நேரத்தில் சொல்ல வந்த கருத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பெண்கள் அனுபவிக்கும் வலிகளை காட்சிகளாக செதுக்கி கொடுத்த விதத்தில் சசி சாதித்து விட்டார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு ஆரம்பத்தில் வரும் “அம்மா அம்மா தான்” பாடல் தொடங்கி, “மாயக்கனவே” பாடல் வரை பாலாஜி ஸ்ரீராம் தனது இசையாலும் பின்னணி இசையாலும் படத்துக்கு பெரிய பலமாக உள்ளார்.மொத்தத்தில், பெண்களை கடவுளாக பார்க்காமல், மனுஷியாக பாருங்கள் என்று சொன்ன ‘நூறு சாமி’ திரைப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.
கணவர் இறந்து அவரது பாடி வரும் அதே ஆம்புலன்ஸில் கர்ப்பவதியான மனைவியை ஏற்றிச் சென்று அவருக்கு குழந்தை பிறக்கும் காட்சி எல்லாம் கண்களை குளமாக்குகின்றன. ஊரில் 18 வயசு நிரம்பித்தான் திருமணம் செய்யணுமா? உங்க சட்டம் எல்லாம் இங்க செல்லுபடியாகாது என சொல்லும் இடத்திலும், ஆண்கள் மறுமணம் செஞ்சிக்கப் போறேன்னு ஒரு வார்த்தையில் சொல்லிடுவோம், பெண்கள் அதை சொல்ல இவ்வளவு பேச வேண்டுமா என அருள் தாஸ் வாத்தியாராக கேட்கும் இடங்களில் எல்லாம் வசனம் உண்மையை உரக்கச் சொல்கிறது.
