மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்லுது இந்திய வரலாறு ? “இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லுது ?
இந்தியாவை ஒன்றிய அரசுன்னு அழைக்கிறதா அல்லது மத்திய அரசுன்னு அழைக்கிறதாங்கிற சர்ச்சை இப்போ தமிழகத்தில் வீரியமடைஞ்சிருக்குது. இந்த சூழலில் இந்தியா வரலாற்று ரீதியா எப்படி அழைக்கப்பட்டதுன்னு பார்ப்போமா ?
இந்தியா உருவான கதை:
1600 ம் ஆண்டு வரை இந்திய துணைக்கண்டம் பல பேரரசுகளாலும், சிற்றரசுகளாலும் ஆளப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் இந்தியா ஒருங்கிணைந்த நாடாக இல்லை. அதன்பின்னர் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயேர்கள் என பல பேரும் பல பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்ற ஆரம்பிச்சாங்க. இதில் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் பெருவாரியான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சென்னை, மும்பை, கல்கத்தா என இந்தியாவின் பல பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆண்டாலும் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனியான ஆட்சிப்பகுதியாகவே இருந்தது. இந்த மாகாணங்கள் அனைத்தும் தனித்தனியாக இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னாடி இவை அனைத்தும் 1773ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய தலைமை மாகாணமாக கல்கத்தாவை அறிவித்தது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி. அப்போதுதான் இந்தியாவில் முதன்முதலாக ஒருங்கிணைந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்டது, அதன்பின்னால கல்கத்தாவில் மத்திய அரசாக இருந்த தலைமை ஆளுநரின் கட்டுப்பாட்டில் அனைத்து மாகாணங்களும் இயங்க தொடங்கியது. பிறகு இந்த அனைத்து மாகாணங்களும் நேரடியாக இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆளுகைக்கு உள்ளே வந்தது.
1900 கள்ல விடுதலைக்குரல்கள் இந்தியா முழுமைக்கும் ஒலிக்க தொடங்கிச்சு, இவ்விடுதலை போராட்டத்தில் அனைத்து மொழி மக்களும் கலந்துகிட்டாங்க., உயிர்த்தியாகம் செய்தனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய பின்னர் அக்கட்சியும் மொழிவழி மாநில உரிமைகளை வலியுறுத்தி பேசியது, காந்தியடிகளும் மொழிவழி மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். பிறகு 1919இல் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது, இதனால் ஆட்சிப்பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுக்கு பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவில் 1935 இல் மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதுஆனால் மேலாட்சி ஆங்கீகாரம் தரப்படலை.
1935 இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்திய அரசின் சட்டம் இந்தியாவை “ஒன்றியம்” என்றும் ‘கூட்டாட்சி’ என்றுமே வரையறுத்தது. பிறகு 1947ல் இந்திய விடுதலைக்கு பின்னர் இயற்றப்பட்ட “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்” படி, “india that is bharath shall be a union of states” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது ‘இந்தியா எனப்படும் பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அழைக்கப்பட்டது.
சரி ஒன்றிய சர்ச்சை ஏன் உருவாச்சு ?
இந்திய விடுதலைக்கு பின்னர் பல அரசியல் கட்சிகளும், மாநில முதல்வர்களும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைத்து வந்தனர். தமிழகத்தில் 70கள் வரை ஒன்றிய அரசு, கூட்டாட்சி என்ற வார்த்தைகள் அரசியல் தீயை மூட்டிக்கொண்டு தான் இருந்தது ஆனா, அதுக்குப் பின்னாடி படிப்படியாக மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படத் தொடங்கியது, இதனால் பல மாநில அரசுகள் மத்திய அரசை ‘எஜமானன்’ தோரணையில் பார்க்க தொடங்கியதால் இதுபோன்ற குரல்களும் கிட்டத்திட்ட மறைந்தே போய்டுச்சு. இப்போ தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசை ‘ ஒன்றிய அரசு’ என அழைத்து கலகக்குரலை தொடங்கி வைச்சிருக்காரு. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்றோரும் ‘ கூட்டாட்சி’ பற்றி குரல் எழுப்பிவர்றாங்க..
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்டவை ஒன்றிய அரசு என்பதையே ஆதரிக்கிறது, காங்கிரஸ் கட்சியும் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என சொல்லிவிட்டது, நாம் தமிழர் கட்சியும் ஒன்றிய அரசு என்பதுதான் சரி என்கிறது. இந்த சூழலில் பாஜக இதனை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு என்பதே சரி என சொல்கிறார். மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக போன்ற கட்சிகள் இந்த விவகாரம் குறித்த எந்த கருத்தையும் இன்னமும் தெரிவிக்கலை
இதப்பத்தி தமிழ்த் தேசியவாதிகள் என்ன சொல்றாங்கன்னா இந்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் சொல்லவேண்டும். மத்திய அரசு என்று இந்திய அரசை சொன்னால், மாநில அரசுகள் ‘ஓரங்கட்டப்பட்ட அரசுகள்’ என்றுதானே பொருள். இந்தியா பல மொழிவழி தேசிய இனங்களை தன்னகத்தே கொண்ட நாடு, எனவே அதனை ஒன்றிய அரசு என அழைப்பதே சரியானது. 1935 இல் ஆங்கிலேயர்கள் இயற்றிய இந்திய அரசு சட்டத்தில் இந்தியாவை ‘கூட்டரசு’ என்றுதான் சொன்னார்கள், அப்போது மாகாண முதல்வர்கள் ‘PREMIER’ அதாவது பிரதமர் என்றே அழைக்கப்பட்டனர், அந்தளவுக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய சட்டமாகவே அது இருந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர்களும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் போது ராணுவம், பணம் அச்சிடுதல், வெளியுறவுத்துறை உள்ளிட்ட மூன்று அதிகாரங்கள் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே வழங்கப்படும்னு அறிவிச்சாங்க. அதன்பின்னர் பாகிஸ்தான் பிரிவினை, இந்து-முஸ்லீம் கலவரம் வந்த பிறகு மாநிலங்களின் பல அதிகாரங்களை ஒன்றிய அரசின் கைகளுக்கு கொண்டு போய்ட்டாங்க.. அதற்கு முன்னர் காங்கிரஸின் கொள்கை ஒன்றியத்திலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும், மாநிலங்களிலிருந்து கிராமங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்ங்கிற மாதிரி தான் இருந்துது.
சோவியத் யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் குடியரசு என்றுதான் அழைக்கப்பட்டது அதனால் தான் ரஷ்யா கூட ‘சோவியத் யூனியன் ஆஃப் ரிப்பப்ளிக்’ ஆக இருந்தது. USA ன்னா United States of America அதாவது ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்று பொருள், இதில் ‘ஸ்டேட்ஸ்” என்பது ‘நாடு’ என்ற பொருளிலேயே அழைக்கப்படுது. இந்திய அரசியமைப்பிலும் ‘india that is bharath shall be a union of states’ என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, அதாவது ‘இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம்’ என்றுதான் பொருள். எனவே ஸ்டேட் என்றால் நாடு என்றுதான் பொருள், ஆனால் இந்தியாவில் நாம் அதனை மாநிலம் என்று அழைக்கிறோம், அது தவறானதுன்னு சொல்றாங்க.
ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கியபோது, மத்திய அரசு என்பது ‘ ஒன்றிய அரசு’ என்றுதான் அழைப்போம் என்றார், அது அப்போ மக்கள் மத்தியில தாக்கத்தை உருவாக்கி அவர் ஆட்சியை பிடிக்க உதவியது. ஆரம்பத்தில் ஒன்றிய அரசுக்கு குறைவான அதிகாரங்களே ’ஒன்றிய பட்டியலில்(union list)’ இருந்தது, அதிக அதிகாரங்கள் ‘மாநில பட்டியலில்(state list)’ இருந்தது. அதன்பின்னர் பல காலகட்டங்களில் பல பிரதமர்கள் படிப்படியாக ‘ மாநில பட்டியலில்’ இருந்த பல அதிகாரங்களை ‘ ஒத்திசைவு பட்டியலுக்கு(concurrent list)’ கொண்டு போனாங்க. அதனால்தான் இப்போ ஒன்றிய அரசுக்கு எதிரான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கு. அதனால் ஒன்றிய அரசு என சொல்வதுதான் அரசியலமைப்பு சட்டப்படி சரியான வார்த்தை, இதில் எந்த தவறும் இல்லை. இயல்பான ஒரு சொல்லாடலைத்தான் இப்போது திமுக பயன்படுத்துகிறது, ஆனால் நீண்டகாலமாக இதனை பலரும் பயன்படுத்த மறந்துவிட்டதால் இப்போது அது பலருக்கு ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்குது. இந்தியா என்பது பல நாடுகளின், பல மொழிவழி தேசிய இனங்களின் தொகுப்பாகவே உள்ளது, இது ஒன்றிய அரசுதான். மத்திய அரசு இல்லை.” என்கிறார்கள்.
ஆனா வழக்கம் போல பிஜேபி காரங்க ஒன்றிய அரசுன்னு அழைப்பது தவறு ? மத்திய அரசுன்னு அழைப்பது தான் சரின்னு சொல்லிட்டு வர்றாங்க.உடனே
திமுக காரங்க ஒன்றிய உள்துறை. அமைச்சர் அமித்ஷா டேபிள்ல இருக்கிற பெயர்ப்பலகைய கட்டங்கட்டி இதுக்கென்ன அர்த்தம் னு பதில் கேள்வி கேக்குறாங்க. அதுல UNION HOME MINISTER ங்கிற பெயர்ப் பலகை தான் இருக்குது. முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க மத்திய அரசா ஒன்றிய அரசா சார்ன்னு கேட்டால் ? ஒன்றிய அரசு என்பது தான் சரியான வார்த்தை.அதனால ஒன்றிய அரசுன்னே அழைப்போம் !