அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். போடியிலும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், இவர்களுடன் 6 பேரை அறிவித்துள்ளது. அதில், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழி பெயரும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு அதிமுகவினர் உள்பட கூட்டணிக் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்

இது சம்பந்தமாக அதிமுக கூட்டணிக் கட்சியினர் சிலரிடம் கேட்டபோது, “இந்த நிலக் கோட்டை தொகுதி அதிமுகவுக்குச் சாதகமான தொகுதிதான். இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெ’ இருந்தபோது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதில்தான் ‘டி.வி’ சின்னத்தில் போட்டியிட்ட ராமசாமி 2011ல் வெற்றிபெற்றார்.

அப்பொழுது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகுதான் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானார். அதைத் தொடர்ந்துதான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஜான்பாண்டியன் போட்டியிட விரும்பியிருக்கிறார். அதுபோல் இத்தொகுதியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில்தான் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வந்தபோது ஜான்பாண்டியன் தனிப்பட்ட முறையில் கட்சிப் பொறுப்பாளர்களுடன் வரவேற்பு கொடுத்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, நிலக்கோட்டை தொகுதியை, தனக்கு ஒதுக்கிக் கொடுக்க தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டுமென்று கூறியிருக்கிறார். அதைப் பொறுமையாகக் கேட்ட அமித்ஷாவும் அவசியம் முதல்வரிடம் பேசி நிலக்கோட்டை தொகுதியை வாங்கிக் கொடுக்கிறேன் என்று உறுதி கொடுத்துவிட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து, சென்னை சென்ற அமித்ஷா, முதல்வர் எடப்பாடியிடமும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடமும் நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு அவசியம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

ஆனால், இத்தொகுதியின் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனோ இத்தொகுதி அதிமுக கோட்டை. அதைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது, சிட்டிங் எம்.எல்.ஏ.வான தேன்மொழிக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்துகிறார். அதுபோல் அதிமுக கோட்டையாக இருக்கக்கூடிய இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற மனநிலையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருந்துவந்தனர். இருந்தாலும், அமித்ஷா தொடர்ந்து அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவந்ததார். ஆனால், நிலக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லாத எடப்பாடி, அமித்ஷா உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுச் செயல்பட ஆரம்பித்தார்.

அதன் அடிப்படையில்தான், அதிமுகவில் ஜெ’ இருந்தபோதே வேட்பாளர்கள் பட்டியலை ஒட்டுமொத்தமாக அறிவிப்பார். ஆனால், எடப்பாடியோ அமித்ஷாவுக்குப் பயந்து முதல் கட்ட வேட்பாளர் என்ற புது நடைமுறையைக் கொண்டுவந்து அதில் ஆறு வேட்பாளர் பட்டியலில் நிலக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தேன்மொழியை அறிவித்து இருக்கிறார். அதைக் கண்டு, ஜான்பாண்டியன் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அது போல அதிமுகவினரும் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கொடுத்ததைக் கண்டு ஒருபுறம் அதிருப்தியிலும் மற்றொருபுறம் சந்தோஷத்திலும் இருந்து வருகிறார்கள்” என்றனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள பிஜேபியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உத்தரவை மதிக்காமல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனியாகச் செயல்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜ கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக வழங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 5 தொகுதிகள் வழங்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. அதில், மயிலாப்பூரில் மேலிட சிபாரிசில் கே.டி.ராகவன் நிறுத்தப்படுகிறார். துறைமுகம் தொகுதி பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நடிகை குஷ்பு, வேளச்சேரி தொகுதி மாநில செயலாளர் டால்பின் தர் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. கொளத்தூர் தொகுதியை பாஜ வேண்டாம் என்று கூறியது. ஆனால் தோற்கும் தொகுதியை நாங்கள் மட்டுமே வைத்திருக்க முடியாது என்று கூறி, கொளத்தூரை பாஜவுக்கு தள்ளிவிட்டுள்ளது.மேலும், பெரும்புதூர் அல்லது காஞ்சிபுரம் வேண்டும் என்றும் கேட்டனர். அதில் காஞ்சிபுரத்தை அதிமுக வழங்கியுள்ளது. அதில் கேசவன் என்பவர் நிறுத்தப்படுகிறார்.

திருத்தணியில் சக்கரவர்த்தியும், பழனியில் முன்னாள் எம்பி கார்வேந்தன், சிதம்பரத்தில் ஏழுமலை, மேற்கு மண்டலத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் மற்றும் ஒரு தொகுதி சி.பி.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. பாஜ தலைவர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிட விரும்புவதால் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமியின் மகன் டாக்டர் பிரேமுக்கு ஆத்தூர் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு முருகானந்தமும், திருவண்ணாமலையில் தணிகைவேல், வேலூரில் கார்த்தியாயினி, ஓசூரில் நரேந்திரன் நிற்கின்றனர். இதற்காக, இந்த தொகுதிகளை பாஜ கேட்டு பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தொகுதியை பாஜ கேட்டது. பின்னர் திடீரென தங்களுக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அங்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் போட்டியிடுகிறார். நெல்லையை நயினார் நாகேந்திரன், ராஜபாளையத்தை நடிகை கவுதமி ஆகியோருக்காக வாங்கியுள்ளனர்.

நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை கேட்டு வாங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ராஜாவுக்காக கேட்டு வாங்கியுள்ளனர். இதை தவிர கன்னியாகுமரியில் 2 தொகுதிகள் வாங்கியுள்ளனர். ஈரோடு, பவானி, சூலூர், கேவிகுப்பம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு ஆகிய இடங்களை கேட்டு பெற்றுள்ளனர். அதில் தென் மாவட்டங்களில் மட்டும் பாஜ 13 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயமான தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 7 உட்பிரிவுகளை இணைத்து ஒன்றாக அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல பட்டியல் இனப்பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதில் 7 உட் பிரிவுகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜ ஏற்றுக் கொண்டது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை.

சென்னை வந்த பிரதமர் மோடி நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர் என்று கூறினார். இதனால் அந்த சமுதாய இளைஞர்களை பாஜ பக்கம் திருப்பியது. ஆனால் பாஜ வாங்கிய 20 தொகுதிகளில் ஒரு தொகுதிகள் கூட தேவேந்திரர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அந்த சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தேவேந்திரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 13 தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியுள்ளது