எடப்பாடிக்கு சட்டரீதியாகச் சிக்கல் வந்தால், அன்று கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தன் கைக்குள் வந்துவிடும். எதற்குத் தேவையில்லாமல் சசிகலா பக்கம் சாய வேண்டும் என்கிற எண்ணமும் பன்னீரிடம் உள்ளது

“சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர் மாறிவருகிறார்” என்று செய்திகள் பரவிவந்த நிலையில், நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்து மீண்டும் பழனிசாமி பக்கம் சாய்ந்திருக்கிறார் பன்னீர்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்தன. சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தன. அதற்குத் தோதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், “கட்சியின் தலைமை சசிகலாவைக் கட்சிக்குள் இணைப்பது குறித்து முடிவெடுக்கும்” என்றது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, டிசம்பர் மாத இறுதியில் அ.தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்டும் மூடில் எடப்பாடி இருக்கிறார். இன்றைய நிலையில் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு ஆதரவான நபர்களே அதிகம் இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் இருந்தால், பொதுக்குழுக் கூட்டத்தில் பன்னீருக்கு செக் வைக்க எடப்பாடி தரப்பு தயாராக இருந்தது. மற்றொருபுறம் டெல்லி தரப்பின் கண்ணசைவும் பன்னீரை யோசிக்கவைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.பன்னீரை நன்கு அறிந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டால், “அ.தி.மு.க -வின் தலைவராக பன்னீர்செல்வம் இருந்தாலும், அவர் எந்த முடிவையும் டெல்லி பாஜக தலைமையின் ஆலோசனைப்படியே எடுத்துவருகிறார். சசிகலா விவகாரத்தில் ஆரம்பம் முதலே மோடி எதிர்ப்பு நிலையிலேயே இருந்துவருகிறார். இப்போதும் அந்த நிலையில் மாற்றம் இல்லை.

பன்னீ்ர், சசிகலா பக்கம் சாய ஆரம்பித்ததுமே எடப்பாடி தரப்பு டெல்லிக்கு வேறு மாதிரியாக சில தகவல்களை பாஸ் செய்தது. அதனால் டெல்லி தரப்பு உஷாராகி, பன்னீரிடம் இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. இதன் பிறகே பன்னீர், பழனிசாமியுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்” என்கிறார்கள்.

மற்றொரு புறமோ, “பன்னீரின் இந்த அமைதிக்குக் காரணமே, எடப்பாடி மீதான வழக்குதான். ஒருவேளை எடப்பாடிக்கு சட்டரீதியாக சிக்கல் வந்தால், அன்று கட்சியின் முழுக்கட்டுப்பாடும் தன் கைக்குள் வந்துவிடும். எதற்குத் தேவையில்லாமல் சசிகலா பக்கம் சாய்ந்து அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்கிற நினைப்பிலும் அவர் இருக்கிறார்” என்கிறார்கள்.

பன்னீரின் அரசியல் அவருக்கு மட்டுமே தெரியும்!

அ.தி.மு.க-வின் சட்டவிதிகள் மாற்றப்பட்டு, பொதுச் செயலாளர் என்கிற பதவியே நீக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டு, அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. இதன்படி நான்கு தேர்தல்களையும் சந்தித்துவிட்டோம். இந்தச் சூழலில், சசிகலாவால் அ.தி.மு.க-வை ஒருபோதும் சட்டப்படி உரிமை கோரவே முடியாது. பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கால், நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை முன்னிறுத்தும் சசிகலா, தான் கையெழுத்திட்டு அனுப்பும் லெட்டர் பேடுகளில், ‘அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர்’ என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, நம்மைப் போல கட்சியின் பெயரை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினால், சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

இரண்டாவது, கழக நிர்வாகிகள் யாரும் அவருடன் இல்லை. அவர் சிறையிலிருந்து சென்னை வந்தபோதும், அம்மாவின் நினைவிடத்திற்குச் சென்றபோதும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்றபோதும், அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை. ஆக, மூன்று சந்தர்ப்பங்களில் அவருக்கு கழக நிர்வாகிகள் யாரும் ‘சப்போர்ட்’ செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அவர் கட்சிக்குள் நுழைந்தால், பின்னாலேயே மன்னார்குடி குடும்பமும் நுழைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே சுழலுக்குள் சிக்கிக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். மூன்றாவது, பன்னீர்செல்வம். கட்சிக்குள் தன்னுடைய இருப்பை பலப்படுத்திக் கொள்ளத்தான், அவ்வப்போது அரசியல் அதிரடியை அவர் அரங்கேற்றுகிறாரே தவிர, சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவரும் மனநிலையில் அவர் இல்லை.

2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் 33 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். அம்மா இல்லாத காலக்கட்டத்திலும் கூட, 66 சீட்களில் வெற்றிப் பெற்றிருக்கிறோம். இரட்டை இலை இல்லையென்றால், இந்த வெற்றிக்கூட இல்லை என்பது பன்னீருக்குப் புரியும். ஆக, சசிகலாவை வைத்து அவர் அழுத்தம் கொடுப்பாரே தவிர, தன் இருப்பை விட்டுக் கொடுக்கவோ, கட்சியை முடக்கவோ பன்னீர் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார். தவிர, பலமான அ.தி.மு.க தான் பா.ஜ.க-வின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் திட்டத்திற்குக் கை கொடுக்கும். டெல்லி நம் பக்கம்தான் நிற்கிறது. ஆக, சசிகலாவால் ஒன்னும் பண்ண முடியாது’ என்று அந்த மாவட்டச் செயலாளரிடம் தன் மனதில் இருந்ததைக் கூறியிருக்கிறார் எடப்பாடி.