ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது
விறுவிறுப்பான அரசியல் திரில்லரான ‘கராத்தே பாபு’ படத்தில் தவ்தி ஜிவால், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்
பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.
இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று ‘கராத்தே பாபு’ திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகி உள்ளது,” என்று தெரிவித்தார்.
