மீண்டும் தமிழக  அரசுப் பணியில் அமுதா ஐஏஎஸ்!

 

தமிழக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு பணியிலிருந்து அமுதா ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையினால் மத்திய அரசு பணியிலிருந்து அமுதா ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த அமுதா பெரியசாமி இளங்கலை விவசாய அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். 1994ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட அவலங்களை திறம்பட எதிர்கொண்டாரு. இம்மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். சுய உதவிக் குழுக்களின் பங்களிப்புடன் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கப் பயிற்சி அளித்தார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பை தொடரச் செய்தார்.

ஆட்சியராக அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஏராளம்ன்னு தான் சொல்லணும். பின்னர் தமிழ்நாடு அரசின் பொது (தேர்தல்) துறையில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார். தமிழ்நாடு அரசின் சுகாதார கட்டுப்பாட்டு சமூகம் மற்றும் குடும்ப நலத்துறையில் எய்ட்ஸ் இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். நீர் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக இருந்திருக்காரு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றார்.

அப்போது மணல் ஏற்றி வந்த லாரி அமுதாவை இடித்து கீழே தள்ளிவிட்டு சென்றது. இருந்தாலும் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் மணல் கொள்ளைகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது பருவமழை நிவாரணத்திற்கான சிறப்பு அதிகாரியாக களத்தில் இறங்கி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். வெள்ளத்தில் தத்தளித்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தார். ராணுவத்தினருடன் மழை, வெள்ள நீரில் இறங்கி மீட்பு பணிகளில் நேரடியாகவே ஈடுபட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உதவித் தேர்தல் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கத்தின் போது ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியை பொறுப்புடன் செய்து முடித்தார். எந்தவொரு பிரச்சினையும் இன்றி, பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் ஏற்படாமல் அமுதா ஐ.ஏ.எஸ் செயல்படுத்திக் காட்டினார். தற்போது பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களின் சேவை நமது மாநிலத்திற்கு தேவை என்று தமிழக அரசுக்கு தேவைன்னு
அவரை தமிழகப் பணிக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் பதவியிலிருந்து விடுவித்துள்ளது. இதையடுத்து தமிழகப் பணிக்கு மீண்டும் திரும்பும் அமுதாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பொறுப்பு வழங்கப்படும்னு கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருது.இப்போ முதல்வருக்கு உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் என 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளர்களாக இருக்கிறாங்க. முதல்வர் ஸ்டாலின், அமுதாவை தனது செயலாளர்களில் ஒருவராக நியமிக்க விரும்புகிறார். அப்படி நியமித்தால் செயலாளர் ஒன் என்ற நிலையில்தான் அமுதாவை நியமிக்க வேண்டும். ஆனால், செயலாளர் ஒன் என்ற நிலையில் உதயச்சந்திரன் இருக்கிறார். இவர், ஸ்டாலினின் மிக நம்பிக்கைக்குரிய அதிகாரி. அதனால் செக்ரெட்டரி ஒன் பொசிஷனில் மாற்றம் இருக்கப்போவதில்லை. அதனால், முதல்வரின் செயலாளராக அமுதா நியமிக்கப்படாது போனால், முக்கிய துறைகளில் ஒன்றின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படவிருக்கிறார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். தற்போதைய சூழலில் உள்துறை, தொழில் துறை, சுகாதார துறை, நிதித்துறை ஆகிய 4 துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இதுவரை மாற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து துறைகளின் செயலாளர்களும் மாற்றப்பட்டனர். ஆனால் இந்த முக்கியமான 4 துறைகளில்மட்டும் இது வரை மாற்றம் பண்ணலை. இந்த 4 துறைகளில் ஒரு துறையில் அமுதா நியமிக்கப்படலாம் என்று கோட்டையில் பேச்சு நிலவுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அனேகம் மாற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறது ஒரு தகவல். ராதாகிருஷ்ணனை மாற்றம் செய்யாமல் இருந்ததை சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டி இருந்தது. தற்போது கொரோனா பரவல் பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் ராதாகிருஷ்ணனை மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுது.  அப்படி சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்படாத நிலையில் மிக முக்கியமான உள்துறையில் அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம்ன்னு சொல்லப்படுது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் உள்துறையில் அவர் நியமிக்கப்படக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுது. அதேசமயம், பள்ளிக்கல்வி அல்லது உயர்கல்வி துறைக்கு அமுதாவை நியமித்து விடுங்கள்னும், முக்கிய துறைகளில் நியமிக்காதீர்கன்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒரு குரூப் வழக்கம்போல லாபிகளில் இறங்கி இருக்கிறது என்கின்றன கோட்டை தகவல்கள். திறமை வாய்ந்த ஒரு அதிகாரியை நல்ல இடத்தில் நியமிக்கப்பார் ஸ்டாலின்னு நம்பலாம் !