நீட் தற்கொலை ? கல்வித் துறையில் வாக்கு அரசியலுக்கு வழிவகுத்து விடும் !

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவத் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில்  2010 – ம் ஆண்டு  திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது. காங்கிரஸ் திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக , தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் , 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது . இந்தத் தீர்ப்பை எதிர்த்து , 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மேல்முறையீடு செய்தது . இதே திமுக காங்கிரஸ் கூட்டணிதான். திமுக காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது . 2017 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது . இந்த நிலையில்தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வைக் கொண்டுவந்த திமுகவும் , காங்கிரஸும் எதிர்க்கட்சியாக அதைக் கடுமையாக எதிர்த்தன . திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதிகளை அளித்தார் . திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தனர் இந்நிலையில் , ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் , நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளார் .ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதினார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள், இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனிதா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டில் “நீட்” தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்தேர்வில் , சிபிஎஸ்இ பள்ளி , கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் அதிகமாகத் தேர்வாகிறார்கள் என்று முன்பு கூறப்பட்டது . நமது மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் அதிகமாக வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது . இதனைக் கவனத்தில் கொண்டு , சிபிஎஸ்இ பாடத்திட்டத் தரத்திற்கும் மேலாக , தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் பாடத்திட்டம் சென்ற ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது . ஆனாலும் , அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிகமாக வெற்றி பெற முடியாமல் போனதைக் கருத்தில் கொண்டு நீதியரசர் பி . கலையரசன் தலைமையில் இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார், அதாவது நீட் தேர்வில் 10 சதவீத இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு 7.5 % இட ஒதுக்கீடு செய்துள்ளது . அதனால் மேலும் 300 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளன .

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளார்கள் . இடங்களோ 5,550 தான் .  தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் , இந்த நீட் தேர்வு எளிதாக இருக்காது என்று கூறியதை தொலைக்காட்சிகளில் பலரும் பார்த்திருப்பார்கள் . நீட் தேர்விற்கு தயாரான மாணவர்களில் கடந்த ஆண்டு மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . எப்படியாவது இந்த நீட் தேர்வில் எம்.பி.பி.எஸ் . படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தவர்கள் இவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை .

தேர்வுக்கான நாள் நெருங்க நெருங்க இவர்கள் மனதில் பயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கலாம் . இந்தப் பின்புலத்தில் , இம்மாணவர்களின் பெற்றோர் அவர்களை டாக்டராக்குவதைத் தங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடக் காத்திருந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் . அப்படியென்றால் , நீட் தேர்வு எழுதும் மாணவர்களையும் விட , அம்மாணவர்களின் பெற்றோரின் மனதில்தான் அப்பேராசை அதிகமாகியிருக்கிறது.  அதன் காரணமாக , தங்கள் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் ஒவ்வொரு நாளும் நீட் தேர்வை நினைவூட்டி , அப்பிள்ளைகள் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தூண்டிவிட்டிருக்கக் கூடும் . அது தவறல்ல . எந்த தருணத்திலும் கூட பெற்றோர் நீட் தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளை அழைத்து , நீட் தேர்விற்கு நிகரான வங்கித் தேர்வு , ரயில்வே தேர்வு . ராணுவத் தேர்வு , யு.பி.எஸ்.இ தேர்வு. , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு என பற்பல தேர்வுகள் உண்டு எனக் கூறி , நீட் தேர்வுக்காகப் பயப்பட வேண்டாம் என்று அவர்களின் பயத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை.

வங்கி தேர்வு முதலிய தேர்வுகளை எழுதுகிற மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை . நீட் தேர்வு எழுகிற மாணவர்கள் மட்டும் இனம் தெரியாத ஏதோ ஒரு பயத்திற்கு உள்ளாகி , உயிரை மாய்த்துக் கொள்கிற துயரம் தமிழ்நாட்டில் மட்டும் தொடர்ந்து நடக்கிறது . முதலில் அனிதா என்ற அரியலூர் மாணவி தற்கொலை செய்து இறந்து போனார் . இப்போது விருதுநகர் , மதுரை , தருமபுரி ஆகிய மூன்று ஊர்களில் இரண்டு மாணவர்களும் , ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் . இறந்தவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்று இதனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது . தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் , அந்தத் தேர்வை எழுதிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மத்தியில் இருக்கும்போது , இவர்களுக்கு மட்டும் ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் . இறந்த மூன்று மாணவர்களும் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாகி விடக் கூடாது . தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் தேர்ச்சியடையாமல் போய்விடுவோமோ என்ற அவநம்பிக்கையும் அவர்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை உறங்க விடாமல் செய்திருக்க வேண்டும் . இதனால் சரியாகச் சாப்பிடுவதைக்கூட அவர்கள் தவிர்த்திருக்கலாம் .

18 வயது வரை அவர்களை ஊட்டி வளர்த்த அவர்களுடைய பெற்றோர் , அவர்களை உற்றுப் பார்த்திருந்தால் பிள்ளைகளின் அகத்தை அவர்களின் முகம் காட்டியிருக்கும் ,  அம்மாணவர்களுக்கு ஆறுதல் சொல்ல , அரவணைத்துக்கொள்ள , அறவழி காட்ட அம்மாணவர்களின் ஆசிரியர்களும் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது . காரணம் , அம்மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறவர்கள் , ஒரு மர்மக் கதையைப் போல இவர்கள் உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டு வெற்றி கிட்டத் தவறுமானால் எப்படிப் பெற்றோரை சந்திப்பது நண்பர்களை சந்திப்பது என்ற சுனாமிக்குள் சிக்கி விடுகிறார்கள் , இவ்வாறு பார்க்கையில் , மாணவர்களின் தற்கொலைக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல , அவர்களின் பெற்றோர் , ஓரளவிற்கு அவர்களின் ஆசிரியர்கள் , ஏன் , இந்தச் சமூகமும் காரணமாகும் .

மருத்துவக் கல்வியைப் படித்து முடித்து ஏழை மக்களுக்கு சேவை செய்யப் போவதாக அவர்கள் ஒன்றும் பிரகடனம் செய்தவர்கள் அல்ல , அவர்களுடைய பெற்றோரும்கூட அவ்வாறு சொன்னவர்கள் அல்ல , முழுக்க முழுக்க இந்த மருத்துவக் கல்வியை வணிக நோக்கில்தான் தங்களின் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர்கள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் , அதனால் , இந்த நீட் தேர்வு என்பது முதலிட்டுக்கான லாபக் கணக்கைப் பார்க்கும் வணிகமாகக் குறுகிவிட்டது . இந்த தற்கொலைச் சம்பவத்தில் மிகவும் வருத்தப்படக்கூடிய செயல் , இது நடந்து முடிந்த பிறகு ஏதோ இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல எல்லா எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அவசர அவசரமாக அங்கே ஓடுகிறார்கள் , மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தருவதாகப் பேசுகிறார்கள் , லட்சக்கணக்கில் பணத்தை அவர்கள் கையில் திணித்து அவர்களுக்கு உதவி செய்வதைப் படமெடுக்கிறார்கள் , பத்திரிகைகள் அவற்றை வெளியிடுகின்றன , வேலைக்கான இப்படிப்பட்ட பண உதவிகள் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வாக்குறுதிகள் , பிற தொண்டு நிறுவனங்களின் நிதியுதவிகள் இவை அனைத்துமே , அந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக , ஊக்குவிப்பது போல அமைகின்றன . தற்கொலையால் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாமல் தடுத்துவிட்டதைப் போலச் செய்யப்படுகிறது .

இவற்றையெல்லாம் உற்றுப் பார்த்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருபாகரன் குழு , ‘ அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்கள் தற்கொலைகளை ஊக்குவிப்பதாக உள்ளன ‘ என்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும் . ஏன்னா , இதே சென்னை உயர்நீதிமன்றம்தான் ‘ நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள மாவட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமானால் , தோல்வியால் நிகழும் தற்கொலை மரணங்களைத் தடுத்துவிட முடியும்னு ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது . நீட் தேர்வு என்பது 5,550 இடங்களுக்குப் போட்டி போடுகிற 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்களை வடிகட்டுவதற்குச் சமமானது . ஒரு கட்சித் தலைவர் , ‘ நீட் தேர்வை ஒழித்துவிட்டு பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து , இந்த 5,550 மாணவர்களையும் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் . பிளஸ் டு தேர்வு என்பது அம்மாணவர்கள் பல வழிகளில் பயணிப்பதற்கான இறுதித் தேர்வு. பொறியியல், கலை, அறிவியல் , வணிகவியல் மருத்துவவியல் , தணிக்கையியல் இப்படிப் பல துறைகள் உள்ளது. பிளஸ்டூ தேர்வு என்பது இவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான சந்திப்பு மையம்.ஆனால் நீட் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு மட்டுமே மாணவர்களை வடிகட்டி தேர்ந்தெடுப்பது.

நீட் தேர்வு அகில இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தற்கொலைகள் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது . படிப்பறிவில் பின்தங்கிய மிசோரம் , அசாம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் கூட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.யாரும் போராடவில்லை.
தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறார்கள் . காரணம் என்னான்னு உங்களுக்கு நல்லாவே புரியும். தமிழ்நாட்டின் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கான நடவடிக்கையைத்தான் கட்சியும் பொறுப்பான எதிர்க்கட்சியும் எடுக்க வேண்டும் . அப்படியில்லாமல் , நீட் தேர்வையே ரத்துச் செய்யுமாறு கோரிக்கை வைப்பதும் அதற்கு காரணமாக தற்கொலைகளைச் சுட்டிக் காட்டுவதும் கல்வித் துறையில் வாக்கு அரசியல் கலப்பதற்கு வழிவகுத்து விடும் !

இப்பொழுது மனதில் எழும் சில கேள்விகளை கேட்கலாம்.
1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இடத்தில் சேர முடியாமல் போனதற்கு நீட் தேர்வு மட்டும்தான் காரணமா? அப்படியானால் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் 28000 கோடி பணம் வெறும் 19 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேருவதற்குத்தான் உபயோகிக்கப்பட்டதா??

2. திறமைவாய்ந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் உள்ள பொழுது அவர்களை விட திறமை குறைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களால் RESULT எப்படி கொடுக்க முடிந்தது? இது அரசின் தோல்வியா??? இல்லை அரசு பள்ளி ஆசிரியர்களின் தோல்வியா???

3. வெறும் 19 மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பிற்கு சென்ற பொழுது நடைபெறாத போராட்டங்கள் நீட் தேர்வை எதிர்த்து மட்டும் நடப்பதன் காரணம் என்ன??

4.NEET தேர்வு பாடத்திட்டம் என்பது NCERT புத்தகங்களை அடிப்படையாக கொண்டு Medical Council of India (MCI) கொடுப்பது. 1961 ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு NCERT. மத்திய மாநில அரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில் உதவுவதற்காக மாதிரி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். NCERT அதாவதுNATIONAL COUNCIL OF EDUCATIOAL RESEARCH & TRAINING பாடத்திட்டத்தை குறைத்து தகுதி குறைந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் வைத்ததற்கு யார் பொறுப்பேற்பது???

5. 12 வருடங்களாக ஏன் பாடத்திட்டம் தமிழ்நாட்டில் மாற்றப்படவில்லை?? Blue print எனப்படும் மோசமான தேர்வுமுறை ஏன் மாற்றப்படவில்லை???

6. ஏன் அரசுப்பள்ளிகளின் தரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறவில்லை?? 28000 கோடி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்ட பொழுது ஏன் போராட்டங்கள் நடைபெறவில்லை??

7. 11ம் வகுப்பு பாடத்தையே கற்று தராமல் மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்??? 11ம் வகுப்பு பாடங்கள் கற்றுத்தரப்படாமல் போனதற்கு நாமும் நமது ஆசிரியர்களும் காரணமாக இருந்துகொண்டு நீட் தேர்வின் மேல் பழி போடுவது எவ்வகையில் நியாயம்??? அவ்வாறு கற்றுத்தரப்படாமல் போனதற்கு ஏன் இங்கு யாரும் போராடவில்லை?? இங்கு ஆசிரியர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை குறைத்துவிட்டு எங்களுக்கு வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி வந்தது என்று கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்???

8. ஒவ்வொரு ஆண்டும் மாநில பாடத்திட்ட தேர்வு முடிவுகள் வரும்பொழுது குறைந்தது 5 மாணவர்களின் தற்கொலை செய்தியை கடக்க நேரிடுகிறது. மிகவும் வருத்தமான விஷயம். ஆனால் நாம் மாணவர்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு மன உறுதி கொடுக்க வேண்டுமா??? அல்லது அவர்களின் தற்கொலையை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்யணும்னு போராடுவதா??

9. அனிதாவின் மரணம் எல்லோரையும் மிகவும் பாதித்த ஒரு விஷயம் அந்த குழந்தையின் மரணத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. தெளிவு பெறுவதற்காக சில விஷயங்களை நாம் இதில் விவாதிக்க வேண்டியுள்ளது.

(i) அனிதா அரசுப்பள்ளியில் படிக்கவில்லை

(ii) பெரம்பலூர் மாவட்டத்தில் மேலமாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்

(iii) தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் போல் அங்கும் 11ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படவில்லை
(iv) 2016ம் ஆண்டே அடுத்த வருடம் நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடக்கும் என்று மத்திய அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்த நிலையில் அதை சரியாக மாணவர்களுக்கு கொண்டு செல்லாதது யார் தவறு???

(v) அனிதாவுக்கு தவறான நம்பிக்கையை கொடுத்தது யார்?? 11ம் வகுப்பில் 50% கேள்விகள் கேட்கப்படும் நிலையில் 11ம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் அவரால் எப்படி நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்??? 11ம் வகுப்பு பாடத்தை அவருக்கு கற்றுத்தராமல் போனதற்கு ஆசிரியர்கள் காரணமா?? அரசாங்கம் காரணமா??

(vi) 2017 ம் ஆண்டு நீட் தேர்விற்கு அவர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நீட் மூலமாகத்தான் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த தகவலை அவருக்கு உறுதியாக தெரிவிக்காதது யார் தவறு???

(vii) அந்த விண்ணப்பத்தில் நீட் தேர்வில் இப்படித்தான் கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதை அவருக்கு கற்றுக்கொடுக்காதது யார் தவறு?? நீட் தேர்வை எத்தனை முறை வேணும்னாலும் 25 வயதிற்குள் எழுதலாம் என்ற வாய்ப்பு உள்ள பொழுது அவருக்கு நம்பிக்கையை கொடுத்து மீண்டும் படிக்க வைக்காதது யார் தவறு?? அவரை உச்ச நீதிமன்றம் அழைத்து சென்ற செலவில் 10ல் 1 மடங்கு செலவு செய்திருந்தால் அவரை மீண்டும் படிக்க வைத்து மருத்துவராக்கி இருக்கலாமே?? அதை செய்யாதது யார் தவறு???

(viii) இப்படி அனைத்து தரப்பிலும் தவறு உள்ள பொழுது நீட் தேர்வின் மீது மட்டும் பழிபோட்டு மாணவர்களுக்கு அந்த தேர்வின் மீது வெறுப்பு வருமாறு செய்வது எந்த வகையில் நியாயம்???

10. நீட் வந்த பிறகும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை மட்டுமே உள்ளது. நான் தமிழ்நாட்டை சார்ந்தவன் என்று தமிழ்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் சான்றிதழ் பொய்யாக வாங்கி வந்தால் மட்டுமே ஒருவேளை அடுத்த மாநில மாணவர்கள் சேரலாம்.

11. நீயா நானா கோபிநாத் முதல் கரு பழனியப்பன் வரை அனைவரும் நீட் தேர்வு எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று பொய் பிரச்சாரம் செய்வது நியாமா?? ஏன் பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்?? இப்படி பொய்யான தகவல்களை கூறினால் மக்கள் இந்த தேர்வை எழுதாமல் போனால் யாருக்கு பாதிப்பு??

12. அடுத்ததாக நீட் மூலம் சமூகநீதி மறுக்கப்பட்டதாக அனைவரும் மேடைக்கு மேடை ஏன் பொய் பேசுகிறார்கள்?? இங்கு கடந்த வருடம் (2019) தமிழ்நாட்டு MBBS மாணவர் சேர்க்கை தரவுகளை தோராயமாகப் பார்க்கலாம்

a) மொத்த தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாநில இடங்கள் -3050

b) பொது பிரிவிற்கு (open category) ஒதுக்கப்பட்ட இடங்கள் -945

(i) பொதுப்பிரிவில் BC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679
(ii) பொதுப்பிரிவில் MBC மாணவர்கள் எடுத்த இடங்கள்- 110
(iii) பொதுப்பிரிவில் SC மாணவர்கள் எடுத்த இடங்கள் -20
(iv) பொதுப்பிரிவில் FC (Forward caste) மாணவர்கள் எடுத்த இடங்கள் வெறும் 136 மட்டுமே. (இந்த 136 இடங்களில் பிராமணர்களைத் தவிர வேறு சாதிகளும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

c) பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -915
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -1594)

d) மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு (Most Backward Caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -610
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -720)

e) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (Scheduled caste) ஒதுக்கப்பட்ட இடங்கள் -579
(பொதுப்பிரிவில் எடுத்த இடங்களுடன் தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு கிடைத்த இடங்கள் -600)

f) சென்ற வருடம் சமூக வாரியாக தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற MBBS இடங்கள்
(i) FC-136
(ii) BC-1594
(iii) MBC-720
(iv) SC/ST-600
நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமை செய்வது ஏன்?

13. அடுத்த விவாதம் நீட் வந்ததால் பணக்காரர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கிறது என்கிறார்கள். உண்மையிலேயே நீட் வருவதற்கு முன்னாலும் தனியார் பள்ளிகளில் படித்த பணக்கார மாணவர்கள்தான் சீட் வாங்கினார்கள். நீட்டை ஒழிப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியமா??? அதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு சமூகத்தில் மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்து வரும் பணக்காரர்களை விடுத்து பலனடையாத மக்களுக்கு இடஒதுக்கீடு சென்று சேருமாறு இடஒதுக்கீட்டு முறையை மாற்றவேண்டுமா??? அல்லது நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமா???

14. அடுத்ததாக நாங்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டோம். எங்கள் GER Ratio 49% உள்ளது. உத்திரபிரதேசத்தில் 20% தான் உள்ளது. எனவே எங்களுக்கெல்லாம் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்கிறார்கள் சிலர். ஆனால் பலன் என்ன??? மேலும் ஒரு தகவல் தமிழ்நாட்டில் 49% GER Ratio உடன் உயர் கல்வி படிக்கும் மக்கள் 3.5 கோடி (total population-7 கோடி) என்றால் உத்திரபிரதேசத்தில் 20% GER RATIO உடன் உயர் கல்வி படிக்கும் மக்களின் எண்ணிக்கை 4.6 கோடி (total population-23cr). நம்மை விட அதிகம் மக்கள் எண்ணிக்கையில் உயர்கல்வி படிக்கிறார்கள். அவர்களும் நம்முடன் போட்டிக்கு வருவார்கள். எனவே யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.

15. GER Ratio பெருமை பேசுவதை விடுத்து ஏன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 93% மாணவர்களில் 50% மாணவர்கள் ஏன் Just pass செய்தார்கள் என்று ஆராய்வது பயனளிக்குமா??? அல்லது நாங்கள் 93% pass என்று பெருமை பேசுவது பயனளிக்குமா??? இதுவரையில் நம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் என்ன குறை என்று யாராவது விவாதித்திருக்கிறோமா??? அதை மேம்படுத்தவேண்டும் என்று போராடியிருக்கிறோமா??? முதலில் நம் கல்வித்தரத்தை உயர்த்துவோம். நம் மாணவர்களுக்கு அபரிதமான ஆற்றல் உள்ளது. அவர்களுக்கு முறையான கல்வி கொடுத்தால் அவர்கள் நீட் என்ன எந்த தேர்வையும் ஊதி தள்ளிவிடுவார்கள்.

16. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் 50% முதலாண்டு MBBS மாணவர்கள் Human Physiology, Anatomy and Biochemistry ஆகிய மூன்று பாடங்களில் ஏன் தேர்ச்சி பெறவில்லை?? நீட் தேர்வு மூலம் மாணவர்கள் 2017ம் ஆண்டிலிருந்து எப்படி 80% க்கும் மேல் அந்த மூன்று படங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்???

17. நம் கல்விமுறை மனப்பாடம் செய்யும் கல்விமுறை என்று அப்பட்டமாக தெரியும் பொழுது அதை வைத்து மருத்துவ மாணவர்களை தேர்தெடுப்பது சரியா??? உண்மையான கல்வியாளர்களை வைத்து ஒரு சிறந்த கல்விமுறையை கொண்டு வரவேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை இல்லையா ?? நீட் தேர்வுமுறை சரியில்லை என்றால் அதில் உள்ள குறைகளை மத்திய அரசிடம் கூறி அதை மாற்றுவதும் நம் கடமை தானே ?? நம்ம கல்வியின் தரம் குறித்து இதுவரையில் எந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது சமூகப் போராளிகளோ போராட்டம் நடத்தியுள்ளார்களா??? அல்லது அதை பற்றியாவது பேசியுள்ளார்களா?? தயவுசெய்து யோசியுங்கள்!

18. நம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தி அதை சரிசெய்யும் முறைகளை மாணவர்களிடம் செயல்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதுபோல் நீட் போன்ற திறனறி தேர்வுகள் ஒரு சிறந்த மருத்துவரை உருவாக்குவதில் எப்படி பங்காற்றுகின்றன என்று சில Case study களையும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில அரசு செய்ய வேண்டியவை என்னன்னு பார்ப்போம்.

அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலில் திறமையானவர்களால் நன்கு பயிற்சி அளித்து, பயிற்சி பெற்றவர்களில் தகுதியானவர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்த மையங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தன்னார்வலர்கள், புரவலர்கள், உதவும் மனப்பான்மை உள்ளவர்கள், சமூக அக்கறையுள்ளவர்களை ஒருங்கிணைத்தால் பயிற்சி சிறப்பாக நடைபெறும். இலக்கை எளிமையாக அடைய முடியும். நிறைய அரசுப் பள்ளி மாணவர்கள் NEET, JEE, . . . போன்ற அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி, . . . ஆகியவற்றில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக உள்ள சுமார் 500 – 600 பள்ளிகளில் சுமார் 100 மாணவ மாணவியர் படிக்கும் வகையில் (உண்டு உறைவிட) சிறப்பு மையங்களை உருவாக்கி, அதற்கு நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை முழுநேர பொறுப்பாளர்களாக நியமித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். மையத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள திறமை மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைச் சேர்த்து அவர்களுக்கு பாடம் நடத்துவதோடு, சிறப்புப் பயிற்சியும் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.கடந்த அதிமுக அரசு கிராமப் புற அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை ஆரம்பித்திருந்தது.அதை இந்த அரசும் தொடர்ந்து நீடிக்கும்னு அறிவிச்சிருக்கு.

அகில இந்திய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சிபெற உழைத்த ஆசிரியர்களுக்கு பணப்பலன், சான்றிதழ்கள், விருப்ப மாறுதல், நல்லாசிரியர் விருது அளித்தலில் முன்னுரிமை, . . போன்ற சலுகைகளை . அளிக்க அரசு முன் வந்தால் எல்லாம் சாத்தியம் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்னு ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்தார்கள்.ரத்து செய்ய முடியாதுங்கிறது அவங்களுக்கும் தெரியும். இப்போ ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிறார்கள். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இந்தாண்டு நீட் தேர்வு இருக்கும்.எனவே மாணவர்கள் நீட் தேர்வுக்காக தங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்னு சொல்லியிருக்காரு.வானம் தொட்டுவிடும் தூரம்தான். நம் உழைப்பில் அரசுப் பள்ளியில் நம்மை நம்பி வரும் ஏழை மாணவ, மாணவியரின் முகத்தில் சிரிப்பைக் காண வழிகாட்டலாம் வாருங்கள்.