அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ?

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,  நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி தொடர்ந்துள்ள இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், நீட் தேர்வுக்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறாதோ? என்ற ஐயத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டியது நீட் தேர்வை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசின் கடமை ஆகும். நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு,‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுவதாகதெரிவித்தார். .அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.

நீட் தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளதே? இதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?’’ என கேள்வி எழுப்பினர். நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கக்கூடும். அது நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

அத்தகைய சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமா? ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிரந்தமாக கருகி விடுமோ? என்ற மாணவர்களின் ஐயமும், அச்சமும் நியாயமானவை தான். அந்த அச்சத்தைப் போக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவும் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

காங்கிரசும், திமுகவும் மறுத்தாலும் இந்தியாவில் நீட் திணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான் காரணம் ஆகும். நீட் தேர்வு செல்லாது என்று 2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அத்தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததும் காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான். அப்போது தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில் தான் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

நீட் தேர்வு சட்ட அங்கீகாரம் பெற்றதற்கு இந்தத் தீர்ப்பு தான் காரணமாகும். அந்த வகையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இருக்கிறது.
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெறாத திட்டம் தான்.

கடந்த முறை எந்த புள்ளி விவரங்களும் இல்லாமல் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்த முறை புள்ளி விவரங்களைத் திரட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீட் சவாலை அரசு எவ்வாறு முறியடிக்கும் என்பதே கேள்வி ? நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது எளிதானது அல்ல என்பதை திமுகவுக்கும் நல்லாவே தெரியும். ஆனாலும், நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த திமுகவே, அத்தேர்வை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. அதனால், எப்பாடுபட்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் திமுக அரசின் கடமையாகும்”என்ன செய்யப் போகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று மாணவர்கள் ஆவலோடு எதிர் பார்க்கிறார்கள்.