‘ஆழி ‘திரைப்பட விமர்சனம் !

கடற் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் முரட்டு தாதா மூர்த்தி (சரத்குமார்). இவரது மகள் முகிலா (தீபிகா சதீஷ்) கல்லூரியில் படிக்கும் சக மாணவர் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் முகிலா தந்தைக்கு தெரிய வர அவர் கோபமடைந்து அருளை தனியாக படகில் நடுக்கடலுக்கு கடத்திச் சென்று கொல்ல திட்டமிடுகிறார். அருளை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எதிர்பாராத நிலையில் மூர்த்தி சிக்கலுக்குள்ளாகிறார். இருவருமே உயிருக்கு போராடும் நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் ஆழி படத்தின் கதை.

சரத்குமாரை இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் மட்டுமல்ல அவரது நடிப்பும் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது.நடுக்கடலில் மகளின் காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி வந்து அவரை ரத்தம் பீரீட சொட்ட சொட்ட அடித்து நொறுக்கும்
போது சரத்குமாரா இவ்வளவு முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார் என அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள் ரசிகர்கள்.

நடுக்கடலில் சரத்குமாரும், இந்திரஜித் ஜெகஜித் என இருவர் மட்டுமே கொந்தளிக்கும் கடலில் சிக்கி தவிக்கும் படகில் நடித்திருப்பது அரங்கே ஏதோ நடுக்கடலில் சிக்கி தத்தளிப்பது போன்ற ஒரு உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சரத்குமார் ,மூர்த்தி பாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருக்கிறார். அவரது பயங்கரமான தோற்றமும் முகத்தை மறைக்கும் நீண்ட முடியும் தாடியும் அதிகம் பேசாத முரட்டுத்தன சுபாவமும் அந்தப் பாத்திரத்தை சரியாகவே வெளிப்படுத்துகின்றன. அப்படி ஒரு தோற்றமும் நடிப்பும் அவருக்கு கை கொடுத்து உள்ளது சிறப்பு. அவரது மகளாக வரும் நடிகை தேவிகா சதீஷ் அளவாக வந்து இதமாக மனதில் அமர்கிறார். சரத்தின் மகளைக் காதலிக்கும் வாலிபனாக அருள் பாத்திரத்தில் வரும் நடிகர் இந்திரஜித் ஜெகஜித் புதுமுகம் போல் தோன்றாமல் அந்தப் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். படத்தில் வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலரும் துணைபாத்திரங்களில்  நடித்துள்ளனர்

சரத்குமார் மகளைக் காதலித்த காதலனை கடத்துவது படகுக்குள் அடைப்பது வரை சென்ற கதை அதற்கு பிறகு படகுக்குள்ளேயே சுற்றிச் சுழல்வதால் சற்றே சலிப்பூட்டுகிறது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்த மீன்பிடிப் படகில் உள்ளறையில் நிகழ்கின்றன.  நடுக்கடலில் நிகழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படகையே உள்ளே வெளியே எனச் சுற்றிச்சுற்றிக் காட்டுகிறார்கள்.மூர்த்தி, அருள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படகில் உள்ளேயே நிகழ்கின்றன. ஆனால் நாம் அருகில் இருந்து பார்ப்பது போல் அக்காட்சிகளை நெருக்கமாக ஒளிப்பதிவு செய்து அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் கடல் அலையில் அசையும் படகில் இருப்பதை உணர வைக்கிறது.

ஹாலிவுட் அல்லது மலையாள படங்களில் தான் இது போன்ற கதை அம்சங்களை பார்க்க முடியும். அந்த வாய்ப்பு ஆழி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் கிடைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பு.