டெஸ்ட்– விமர்சனம்.!

தயாரிப்பாளராக இருந்த சசிகாந்த் இயக்குநராக மாறி இயக்கியுள்ள டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது.தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் திரைப்படம் கடைசியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களை கவருமா? ஓடிடியில் நேரத்தை செலவு செய்து ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது குறித்து விரிவாக  பார்க்கலாம்..

அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்ம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், வரவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறது நிர்வாகம். அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லி, தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காகப் பெரும் தொகையைக் கடனாக வாங்கியிருக்கிறார் விஞ்ஞானி சரவணன். அந்தக் கடன் பிரச்னை அவரை இக்கட்டான சூழலுக்கு இழுத்துச் செல்கிறது.அவரை கடத்தியும் செல்கிறார்கள். இவ்வாறு மூன்று மனிதர்கள், மூன்று பலப்பரீட்சைகள் என விரியும் கதைக்களம், எவ்வாறு ஒரு புள்ளியில் இணைகிறது, இதில் யாரெல்லாம் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதே ‘டெஸ்ட்’ படத்தின் கதை.

உச்சத்திலிருக்கும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தின் ஆணவம், தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமிர், தந்தையின் பாசம் என வெவ்வேறு பரிணாமம் கொண்ட பாத்திரத்தில் சித்தார்த். ஆரம்பத்தில் பேட்டை காற்றில் சுழற்றுவது போலத் தோன்றினாலும், இறுதியில் உணர்ச்சிகளைச் சுழற்றும் இடத்தில் பவுண்டரி அடித்திருக்கிறார். குழந்தையின் மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆரம்பக் காட்சிகளிலும் சற்றே சாந்தமாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் நயன்தாரா.  பல இடங்களில் அவரது பாத்திரம் என்ன பேச வருகிறது என்பதும் முழுமையாக சொல்லப்படவில்லை.

மாபெரும் கனவைக் கொண்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் தொடர் சோதனைகள், அதனால் உருவாகும் ஆழமான மனப்பிரச்சினை எனச் சவாலானதொரு பாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். முதல் பாதியில் தன் வேடத்துக்கு ஆழம் சேர்த்தாலும், ஒரு திருப்பத்துக்குப் பிறகு தன் அதீத மிகை நடிப்பின் மூலமாகச் சோதிக்கவே செய்கிறார். மாஸ்டர் லிரிஷ் ராகவ், ஆதியாக தன் பங்கை உணர்ச்சிபூர்வமாகச் செய்திருக்கிறார்; ஆனால், அவர் முதிர்ச்சியாகப் பேசும் இடங்களை இயக்குநர் திரையாக்கத்தில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். தாயாக சில காட்சிகளில் மட்டுமே வரும் மீரா ஜாஸ்மின், அங்கே தனது திறமையை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

மைதானத்தின் பரபரப்பையும், பாத்திரங்களின் உள்ளுணர்வையும் நன்கு படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹிலி. குறிப்பாக, உண்மையான ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுவது போன்று படம் பிடித்திருப்பது இது படத்திற்குப் பலம் சேர்க்கிறது ஒளிப்பதிவு. அதை நியாயமான முறையில் ஒழுங்குபடுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ்.. அதேபோல, திரைக்கதையில் மூன்று மனிதர்களின் சோதனைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கட்டமைப்பினைக் குழப்பமில்லாமல் தொகுத்திருக்கிறது படத்தொகுப்பு. இருந்தாலும், சீரான ஸ்டேஜிங் இல்லாத, நறுக்க வேண்டிய காட்சிகளை அப்படியே விட்டிருப்பது ஏமாற்றமே! பதற்றத்தைக் கூட்டும் வசனக் காட்சிகளில் ஒலிக்கும் அந்த கரகர பின்னணி இசையில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன், உணர்ச்சிபூர்வமான இடங்களில் அடிக்கடி ஒரே விதமான ‘ஹம்மிங்’கைக் கொடுத்து காட்சிகளை விட்டு விலக வைக்கிறார். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்காமல், படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கின்றன.

கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் உளவியல் ரீதியான போராட்டங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்த விதம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கிறது என்றாலும் . தன்முனைப்பு ஒரு மனிதனை எந்த எல்லைக்கு இழுத்துச் செல்கிறது என்பதை ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஷிகாந்த். அது ஐடியாவாக சிறப்பாகத் தோன்றினாலும், ஒரு படமாக உருமாறுவதில் சலிப்பாக ஆகியிருக்கிறது. உதாரணமாக, கிரிக்கெட் காட்சிகளின் பிரமாண்டத்தைத் தத்ரூபமாகக் கொடுத்துள்ள ஸ்டேஜிங், சாதாரண உரையாடல் காட்சிகளில் சுத்தமாக மிஸ்ஸாகிறது. கிளைமேக்ஸில் சித்தார்த், மாதவன் இருவரும் எப்படி தப்பிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உருவாகியிருக்கும். ஆனால், இயக்குநர் அங்கே கோட்டை விட்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது

Related posts: