கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திடீர் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று அவருடன் சந்திப்பு நடத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஆக்டிவாக இல்லாத விஜயகாந்தின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் இன்று நேரில் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துரைமுருகனும், பிரேமலதாவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சார்பாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அவரின் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டு குறித்து விமர்சனம் செய்திருந்த பிரேமலதா, தேமுதிகவை சீண்டினால் இப்படித்தான் நடக்கும். தேமுதிகவின் பலம் இப்போதாவது துரைமுருகனுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்களை சீண்டியதால் வந்த பலன் இது. தேமுதிகவை வீழ்த்த நினைத்து தற்போது துரைமுருகன் வீழ்ந்து இருக்கிறார் என்று கடுமையாக துரைமுருகனை விமர்சனம் செய்து பிரேமலதா பேசி இருந்தார். இது திமுக – தேமுதிக இடையே கசப்பான மோதலை ஏற்படுத்தியது. பிரேமலதா vs துரைமுருகன் என்ற விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நடந்த ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பில் துரைமுருகனும் உடன் இருந்தார்.
கசப்புகளை மறந்து துரைமுருகன் விஜயகாந்தை சந்திக்க அவரின் வீட்டிற்கே சென்றார். உள்ளே சென்ற துரைமுருகனை சிரித்த முகத்தோடு பிரேமலதா வரவேற்றார். தேர்தலுக்கு பின் கூட்டணி தலைவர்கள் கூட விஜயகாந்தை சந்திக்க வராத நிலையில் இன்று ஸ்டாலினும் துரைமுருகனும் விஜயகாந்தை சந்தித்தனர்.
இரண்டு முக்கிய தலைவர்கள் வீடு தேடி வந்ததை பார்த்து பிரேமலதா மகிழ்ச்சி அடைந்தார். தமிழ்நாடு அரசியலில் இந்த சம்பவம் ஆக்கபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளுடன் கசப்புகள் மறந்து, அரசியல் கடந்து சந்திப்புகளை நடத்துவது நாகரீகமான விஷயமாக பார்க்கப்படுகிறதுன்னு சொலாறாங்க.

மிகவும் ஆக்கப்பூர்வமாக அரசியல் இது என்று இணையத்தில் பலரும் பாராட்ட தொடங்கி இருக்காங்க. துரைமுருகன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றதும், பிரேமலதா அவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்றதும் இரண்டு கட்சி தொண்டர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. லோக்சபா தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட கசப்புகளை இதை மறக்கடிக்க செய்யும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் விஜயகாந்த், அவரின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டார். விஜயகாந்த் அருகில் அமர்ந்து ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து கனிவாக கேட்டறிந்தார். கடந்த லோக்சபா தேர்தலின் போது இரண்டு கட்சிக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்த நிலையில், முதல்வரின் இந்த சந்திப்பு அதை சரி செய்யும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
சட்டசபை தேர்தலுக்கு பின்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இன்று ஸ்டாலின் – விஜயகாந்த் இடையே நடந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகப் பார்க்கப்படுது. மரியாதை நிமித்த சந்திப்பு என்று செய்திகள் வெளியானாலும் இதற்கு பின் அது மட்டும் காரணம் இல்லை, வேறு காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.  அதன்படி உள்ளாட்சி தேர்தலில் ஒருவேளை திமுக கூட்டணிக்கு தேமுதிக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமமுக கட்சி திசை தெரியாமல் குழம்பி போய் உள்ளது. அங்கு தேமுதிக நீடிப்பது சந்தேகம் தான். மீண்டும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்ல வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் திமுகவின் முயற்சியாக இது இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.  அமமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இடம்பெற்று இருந்தாலும் பெரிதாக இந்த கூட்டணி அவ்வளவு இணக்கமாக இல்லை. சசிகலாவும் பெரிதாக அமமுக, தேமுதிகவை கண்டுகொள்வதாக இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக வசம் தேமுதிக தஞ்சம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.  தேமுதிக மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப அடிமட்ட அளவில் பணிகளை செய்ய வேண்டும். இதற்கு உள்ளாட்சி தேர்தல் மட்டுமே தேமுதிகவுக்கு உதவும். இதனால் தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.

வட மாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் தேமுதிக திமுகவிற்கு ஒரு வகையில் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று நம்பப்படுகிறது.