நீட்’ தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
‘நீட்’ என்று சொல்லக் கூடிய அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்பட முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் 2017-18 முதல் நீட் நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி அறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்தியாவில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் கேள்வி கேட்கப்படும் என்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆக, இனி நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் மாணவர்களால் மருத்துவப் படிப்பை எட்ட முடியும். இதனால் கடந்த ஆண்டு வரை பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முறை மாறியுள்ளது. இந்த ஆண்டில் இருந்து மாணவர்கள் பன்ரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் கடுமையான சூழலில் நீட் தேர்வுக்கும் தயாராக வேண்டிய சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் – 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசுதெரிவித்தது
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள், இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனிதா எனும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டில் “நீட்” தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாநில அரசு நடத்திய 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.75 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
