அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு !

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவர பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் விளைவால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டுவருவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு’ என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை 2016-17ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அம்மா அவர்களின் தீவிர முயற்சியால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து அந்தாண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது. அம்மா அரசும், பொது மக்களும், தமிழகமும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம். 31/1/2017 அன்று நீட் தேர்வை எதிர்த்து சட்ட முன் வடிவினை சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதே வேளையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடப்பட்டு வருகிறது. நீட் தேர்வு அறிமுகமான பிறகு அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகியவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழக அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசு செயலாளர்களும், பள்ளிக்கல்வித் துறையினால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர்-செயலராக செயல்படுவார். மேற்கூறிய பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூகப் பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரிசெய்ய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாதத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்துள்ளார்