மாநகரங்களில் பெருகிவரும் தண்ணீர் கேன் தொழிலை கதை கருவாக வைத்து இதுவரை தமிழ் சினிமாவில் உருவாகாத ஒரு புது ஜானரில் இந்த வருணன் உருவாகியிருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிதண்ணீர் இலவசமாக இல்லாமல் பணம் கொடுத்து வாங்கி வரும் அவலம் இந்த நாட்டில் நிகழ்ந்து வருகிறது. அதை மையக்கருவாக வைத்து அதற்குள் நடக்கும் அரசியலை கூறும் இந்த வருணன் கவர்ந்தாரா, இல்லையா?
வடசென்னை பகுதியில் சரண்ராஜும், ராதாரவியும் தனித்தனியே தண்ணீர் கேன் பிசினஸ் செய்றாங்க. ராதாரவிகிட்ட ஹீரோ துஷ்யந்த் தும் அவர் நண்பர்களும் வேலை செய்றாங்க. காதலியை பார்க்கும் எண்ணத்தில் சரண்ராஜ் சப்ளை செய்யும் ஏரியாவுக்கு போய் அங்கே உள்ள காதலி வீட்டில் தண்ணி கேன் போடுறாங்க. இதனால சரண் ராஜ் ஆட்களுக்கும், ராதாரவி ஆட்களுக்கும் அடிதடி பிரச்சனையில் போய் முடியுது.
நடுவுல ஒரு போலீஸ்காரர் தன் பங்குக்கு நாட்டாமை பன்றாரு. கடைசியில் வழக்கம் போல் ஹீரோ யார் பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கம் வெற்றி கிடைக்குது. சரி பரவாயில்லை. கதையை சொன்ன விதத்தில் ஏதாவது ட்விஸ்ட் இருக்குமான்னு பார்த்தா அதுவும் இல்லை.
ஒரு கேரக்டர் அறிமுகம் ஆகும் போதே இந்த கேரக்டர் இப்படிதான் முடிய போகுதுன்றதை படம் பார்க்கும் சின்ன குழந்தை கூட சொல்ற மாதிரிதான் இருக்கு. படத்தின் தலைப்புக்கும், ‘நீரின்றி அமையா உலகு’ என்று படத்தில் வரும் வாசகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏதோ குழாய் அடி சண்டையை பார்த்த உணர்வுதான் இருக்கு (படத்தில் நிஜமாகவே குழாயடி சண்டை காட்சிகள் இருக்கு)
வருணன் தலைப்பை பார்த்து உள்ள போனா இந்த பங்குனி வெயிலுக்கு தலையில் மிளகாய் வைச்சு அரைச்ச மாதிரி இருக்கு. படத்தில் சரண் ராஜ் கேரக்டர் திக்கு வாய் மாதிரி வடிவமைச்சிருகாரு டைரக்டர். இது ஏன்னு புரியாத புதிரா இருக்கு. ராதாரவி அண்ணன் “அதை பண்ணிடுவேன், இதை பண்ணிடுவேன்னு” சொல்றதோட சரி எதையும் பெருசா பண்ணலை. ஹீரோவோட நண்பரும், நண்பனின் காதலியும் சுமாரா நடிச்சிருக்காரு. படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் படத்தோட கேமராதான். ஸ்ரீராம சந்தோஷின் கேமராவில் வட சென்னை தெருக்கள் தத்ரூபமா இருக்கு. பத்துவின் ஆர்ட்டைரக்ஷனில் சில பொருட்கள் தனித்துவமாக இருக்கு.
வருணன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய படக்குழுவினர் விழாவில் தண்ணீரின் அவசியம் பற்றி சொல்கிறது என்றார்கள். ஆனால் இந்த படம் தண்ணீர் கேனுக்காக நடக்கும் சண்டையை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லி இருக்கிறது. இருந்தும் கதை கருவுக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்து ஆழமான கதையாக இதை உருவாக்கி இருக்கலாம்.

