ஓபிஎஸ்ஸை கைவிட்ட பாஜக ?

எடப்பாடிக்கு எப்படி கிடைத்தது இந்த பவர்? ஓபிஎஸ்ஸின் டெல்லி சோர்ஸ் காலி – ஆட்டத்தின் போக்கு மாறிய புள்ளி!

அதிமுக உட்கட்சி மோதலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த களேபரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் அப்செட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வளவு விசேஷமாக இல்லை. தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்த போது துணை முதலமைச்சர் பதவியை மட்டுமே பெற முடிந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவி கிடைத்தாலும் அது உச்ச பதவியாக இல்லை, ஏனெனில் இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலோடு தான் அவர் முடிவெடுக்க வேண்டியதாக இருந்தது.

நான்கு ஆண்டு காலம் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட்டதாக காட்டிக் கொண்டாலும் உண்மையில் அப்படி இல்லை. எந்நேரமும் ஒரு விலக்கம் இருந்து கொண்டே இருந்தது. அப்போதே ஓபிஎஸ் தனித்து விடப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே பெரும்பான்மையான அமைச்சர்கள் அப்போது இருந்தார்கள். கட்சியிலும் எடப்பாடியின் நிர்பந்தத்தால் ஒரு கட்டத்தில் தனது ஆதரவாளர்களையே நீக்கும் முடிவுக்கு கையெழுத்து போட்டார் ஓபிஎஸ்.

முதல்வர் வேட்பாளர் விவகாரம், எதிர்கட்சித் தலைவர் விவகாரம், ஒற்றைத் தலைமை விவகாரம் என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது. மொத்த பொதுக்குழுவும் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக நிற்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் உடைந்து போகாதா ஓபிஎஸ் தற்போது மொத்தமாக செய்வதறியாது நிற்பதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இரட்டை இலையும் அவர் வசமானது. இம்முறையும் ஒதுங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையே ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டது. ஆனால் பாஜக தன்னை கைவிட்டுவிட்டதே என்ற வருத்தம் தான் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு இல்லாத போதும் பாஜகவை வைத்தே லாபி செய்து வண்டி ஓட்டி வந்த ஓபிஎஸ்ஸுக்கு ஏன் இந்த பின்னடைவு என்று விசாரித்தோம். அதற்கு பாஜக உட்கட்சி விவகாரத்தை கை காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஓபிஎஸ் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனையின் பேரிலே செயல்பட்டு வந்தார். இதை ஆடிட்டரே ஓரிரு தருணங்களில் பொது வெளியில் உடைத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் டெல்லி பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர் குருமூர்த்தி. அதனால் ஓபிஎஸ் இவர் மூலமே டெல்லிக்கு தனது எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். டெல்லியும் ஓபிஎஸ்ஸை குருமூர்த்தி மூலமாகவே வளைத்து வந்தது. ஆனால் தமிழ்நாடு பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக வந்த பின்னர் குருமூர்த்தியின் வாய்ஸ் பாஜகவில் எடுபடவில்லை. குருமூர்த்தி மீதும் பாஜகவுக்கு நம்பிக்கை போனது என்கிறார்கள்.

குருமூர்த்தி கையிலெடுத்த முக்கியமான விஷயங்கள் தமிழ்நாட்டு அரசியலில் தோல்வியிலேயே முடிந்தன. ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தம், ஜெ.தீபாவை கொண்டு வந்தது, ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்தது என குருமூர்த்தி கை வைத்த திட்டங்கள் எல்லாம் மோசமான தோல்வியைச் சந்தித்தன. இதனால் குருமூர்த்தி மீது டெல்லிக்கு நல்ல அபிப்ராயம் குறைந்து போனது என்று கூறுகிறார்கள்.

அண்ணாமலையின் வேகம், அவரது பாணி தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நல்ல கவனம் பெற்று தந்துள்ளதாக டெல்லி நம்புகிறது. எனவே முக்கிய விஷயங்களில் அவரது முடிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியுடன் தான் நாம் இணைந்து நிற்பது முக்கியமானது என தெரிவிக்க டெல்லி பச்சைக் கொடி காட்டியுள்ளதாக சொல்கிறார்கள். எடப்பாடியை ஆதரிப்பதோடு ஓபிஎஸ்ஸை புறக்கணிக்கும் வேலையிலும் அண்ணாமலை ஈடுபடுவதாக ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது. இதனால் வேறு யாரை வைத்து டெல்லியை எட்டுவது என தெரியாமல் விழித்துவருவதாக சொல்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வம் கூறிவந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதைப் பொறுத்தே அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது தெரியவரும். இந்த சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பயன்படுத்தி அதிமுவில் தனது இருப்பை காட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு வந்தபோதும் அதிலும் எடப்பாடி பழனிசாமியே ஸ்கோர் செய்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே ஏற்பட்டது.

இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று தான் நியமித்த மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு டெல்லியை எட்ட முடியாததே என்கிறார்கள். ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை டெல்லி தலைமையிடம் எடுத்து வைக்க சரியான ஆள் பார்த்து வருவதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதி நேரத்தில் தம்பிதுரையை அனுப்பி மோடியிடம் பேசியது அவர்களுக்கு சாதகமாக காட்சிகள் மாற காரணமாக அமைந்தது.

ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வளவு நாள் பாஜகவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் பாலமாக இருந்தார். அண்ணாமலையின் எண்ட்ரிக்குப் பிறகு அதிலும் தடங்கல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அண்ணாமலை இயல்பாகவே எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே டெல்லியில் தமக்காக பேசுவதற்கு நம்பிக்கையான ஒருவர் அமையும் வரை, அண்ணாமலையின் வாய்ஸுக்கு டெல்லி மதிப்பளிக்கும் வரை அதிமுகவில் கால் வைக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறதாம்.

இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு, தொடர்ந்து மீடியாவின் கவனத்தை பெறுவதற்கு சசிகலாவுடன் இணைந்து கைகோர்ப்பதை தவிர வேறுவழில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கோரிக்கையும் அதுவாகத் தான் உள்ளது. எப்படியும் ஈரோடு கிழக்கு தேர்தல் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இரட்டை இலை இருந்தாலும், இணைந்து செயல்படவில்லை என்றால் திமுக தான் வெற்றி பெறும் என்ற வாதத்தை மீண்டும் முன்வைக்கலாம் என ஓபிஎஸ் தரப்பு திட்டமிடுகிறது.

சசிகலாவும் தொடர்ந்து தனியாக பயணித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு இரு தரப்பும் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இப்போதே இணைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினால் மட்டுமே மக்களவைத் தேர்தலுக்குள் கட்சிக்குள் எண்ட்ரி கொடுக்க முடியும். அல்லது இருவரும் அந்த தேர்தலிலும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டிவரும். எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு இறங்கு முகம் தான் என கூறுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.