இந்தியாவை அலறவிட்ட வைரஸ்கள்!

” 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது” கொரோனா தாக்குதலை உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், சுதந்திரம் பெற்ற பின் இதுவரை இந்தியா எதிர்கொண்ட வைரஸ்கள் தாக்குதல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக காலூன்றி வருகிறது.இதற்கு முன் 1974ல் சின்னம்மை தாக்கம் இந்தியாவை உலுக்கியெடுத்தது.
சின்னம்மை இந்தியாவை அலறவிட்டது என்றால் அது மிகையல்ல. சின்னம்மை நோயால் 61,482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர். அதில் 15,000 பேர் உயிரிழந்தனர்.

1994ஆம் ஆண்டு குஜராத்தின் சூரத் பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் 693 பேர் பாதிக்கப்பட்டனர்.அதில் 56 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு 3,0613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். அதே 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது. இதில் சுமார் 11 லட்சத்து 2,724 பேர் பாதிக்கப்பட்டனர்.எனினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

2009 ஆம் ஆண்டு குஜராத்தில் ஹெபடைடிஸ் தாக்கம் ஏற்பட்டு, 125 பேர் பாதிக்கப்பட்டதோடு, 49 பேர் உயிரிழந்தனர். அதே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலினால் 36, 240 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதி 1,833 பேர் உயிரிழந்தனர்.2014ஆம் ஆண்டு ஒடிசாவில் மஞ்சள் காமாலையால் 3, 966 பேர் பாதிக்கப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர்.2015 ஆம் ஆண்டு மீண்டும் பன்றிக்காய்ச்சல் தனது தாக்குதலை தொடங்கியது.இப்போது பன்றிக்காய்ச்சலால் 33, 761 பேர் பாதிக்கப்பட்டதுடன்,2,035 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டில் சிம்லாவில் 1, 600 பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, 10 பேர் உயிரிழந்தனர்.
2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிபா வைரஸ் தாக்கத்தால், 19 பேர் தான் பாதிக்கப்பட்டனர் எனினும், அதில் 18 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு, பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 647 பேர் பாதிக்கப்பட்டதுடன், 161 பேர் உயிரிழந்தனர்.

தற்போது கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: