ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகமாகுது! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜலதோசம், காய்சல், இருமல், மேல்வலி என்று பலத் தரப்பட்ட சின்ன உபாதைகளுக்கெல்லாம் ஆன்டிபயாடிக்கை அநாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப் படலாம். சிலருக்கு இழுப்பு நோய் வரலாம். இதயத்துடிப்பு சீராக இல்லாமல் போகலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு வரலாம். இது அவரவர் எடுத்துக்கொள்கிற ஆன்டிபயாட்டிக் ரகத்தைப் பொறுத்தது. உண்மையில் ஆன்டிபயாட்டிக்கில் 20%தான் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மீதியுள்ள 80% ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கே உணவாக தரப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நிறைய இறைச்சி, கூடுதலான பால், அதிக முட்டை கிடைக்கிறது. இந்த ஆன்டிபயாட்டிக் தண்ணீரில் கலந்து வரும். அதில் உருவாகிற கிருமிகள் நம்மை வந்தடையும் என்றெல்லாம் ஏற்கெனவே ஆதாரப்பூர்வமான தகவல் வெளிவந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால் நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப் படாமல் போகும் நிலை உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

2019ம் ஆண்டில் உலகின் மிக மோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது. எச்.ஐ.வி, எபோலா, டெங்கு, காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம், தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் உள்ளிட்டவை மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல் களாக உள்ளன.

மேலும் உலகின் மிக மோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களின் பட்டியல்:

1. காற்று மாசுபாடு – நுண்ணிய மாசுகள் மூச்சுக்குழாய் மற்றும் ரத்த ஓட்டத்தில் மிக எளிதாக ஊடுருவி நுரையீரல், இதயம் மற்றும் மூளையைப் பாதித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

2. தொற்றா நோய்கள் – சர்க்கரைநோய், புற்றுநோய், இதயநோய் போன்ற தொற்றாநோய்கள்.

3. சளி, காய்ச்சல் தொற்று – எப்படியான சூழ்நிலையில், எதன் காரணமாக சளி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது.

4. வாழும் சூழலால் ஏற்படும் ஆரோக்கியமின்மை – வறட்சி, பஞ்சம், போர் மற்றும் போதுமான மருத்துவச் சேவைகள் கிடைக்காமை போன்ற சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்குச் சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக்கூடும்.

5. ஆன்டிபயாடிக் மருந்துகள் – சில ஆண்டிபயாடிக் மருந்துகள் உடலில் இயற்கையாகவே செயல்படும் எதிர்ப்புத் திறனைத் தடுக்கிறது.

6. எபோலா – எபோலாவைப் போன்றே உடலின் உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஜிகா, நிபா போன்ற காய்ச்சல் வகைகள் மற்றும் சுவாசக் குழாய் பாதிப்புகள் இந்த ஆண்டும் ஏற்படக்கூடும்.

7. முதன்மையான ஆரோக்கியப் பராமரிப்பு: குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தவொரு நோய் பாதிப்பையும் ஆரம்பநிலையிலேயே சரிசெய்ய முடியும்.

8. தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் – ஒவ்வோர் ஆண்டும், 30 முதல் 40 கோடி இறப்புகள் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தடுக்கப்படுகிறது.

9. டெங்கு – கடந்த 2 வருடங்களில், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காய்ச்சல் டெங்கு.

10. ஹெச்.ஐ.வி. – ஹெச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்பு உணர்வுகள், முன்பைவிட தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த பட்டியலில் நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலையும் இடம்பெற்று உள்ளது. ஆன்டிபயாடிக் மருந்துகளை வரைமுறை இல்லாமல் பயன்படுத்தும் நிலை தொடருமானால் நிமோனியா, டிபி, போன்றவற்றைக் குணப்படுத்துவது கடினமாக இருந்த பழங்கால நிலைக்கு திரும்ப நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகளை வரையறையில்லாமல் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதோடு மறைமுகமாக உணவுச் சங்கிலி மற்றும் நீரிலும் நுழைந்து விடும் நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய செயல் திட்டம் வகுத்துள்ளதுடன் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளது.