முரட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் கலந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா). சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன தனது அண்ணன் சிவாவை (சத்யதேவ்) தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். தன்னுடைய உயரதிகாரியை அறைந்ததால் ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறார். இலங்கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு தீவில் உள்ள பழங்குடியினருடன் வாழ்ந்து வரும் தன் அண்ணனை கண்டுபிடிக்கவும், அந்த பழங்குடியினருடன் கலந்து, அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கும்பலை கண்டறியும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் அண்ணனை சூரி கண்டுபிடித்தாரா? தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினாரா என்பதற்கு விடை சொல்கிறது ‘கிங்டம்’.விஜய் தேவரகொண்டாவின் நடிப்புக்கு 100க்கு 200 மார்க் கூட போடலாம். அந்தளவுக்கு மனுஷன் தனது ஒட்டுமொத்த உடலையும் படத்துக்காக உருக்கியிருக்கும் விதம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. எப்படியாவது விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு பான் இந்தியா வெற்றிப் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என இயக்குநர் கெளதம் தின்னனூரி முதல் பாதியில் போட்ட உழைப்பு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால், 2ம் பாதியில் எங்கே என்ன பிரச்சனை வெடித்தது என்று தெரியவில்லை, படம் டிராக் மாறி சென்று ஆடியன்ஸை கடுப்பாக்கி விடுகிறது.
படம் தொடங்கியதுமே நேரடியாக கதைக்குள் நுழைந்து விடுகிறது. நாயகனின் அறிமுகம், அவரின்நோக்கம், பின்னணி என அனைத்தும் அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு புரிந்து விடுவதால், அடுத்தடுத்த காட்சிகளுடன் நம்மால் எளிதில் ஒன்றிவிடமுடிகிறது. நாயகனின் அண்ணனை உடனடியாக காட்டிவிடாமல் ஒரு சிறிய பில்டப்புடன் அறிமுகம் செய்தது சுவாரஸ்யம் தருகிறது. இங்கிருந்து தொடங்கும் கதை, அடுத்தடுத்து நகர்ந்து இடைவேளை வரை எந்த தொய்வும் இன்றி செல்கிறது.அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்சினையே இரண்டாம் பாதியில் தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது. போலீஸ் இன்ஃபார்மரை கண்டுபிடிப்பதாக தொடங்கி க்ளைமாக்ஸ் வரை நீளத்தை கத்தரித்திருந்தால் கொஞ்சம் ஷார்ப் ஆக வந்திருக்கலாம். ஆனால், ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் ஒரு கட்டத்தில் கொட்டாவியை வரவழைத்து விடுகிறது. கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறையை பார்க்கும்போது இப்படத்துக்கு எப்படி யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கத் தகுந்த படம் அல்ல.
