‘வல்லமை’–விமர்சனம்.!

மனைவியை இழந்த விவசாயி பிரேம்ஜி, தனது மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வருகிறார். மனைவி இழந்த துக்கத்தால் தனது செவித்திறனையும் இழக்கிறார் பிரேம்ஜி. செவியில் சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார்.வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளி படிப்பு என்று அனைத்தும் அவர் நினைத்தது போல் நடக்கிறது. இதற்கிடையே மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக மருத்துவரை சந்திக்கும் போது, சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தனக்கு நேர்ந்த அநீதி இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் சிறுமி, தன்னை சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அதையே தனது அப்பாவிடமும் கூறுகிறார்.மகளின் மனநிலையை புரிந்துக் கொள்ளும் பிரேம்ஜி, குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து, அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சாமானிய மனிதர்களின் அசாத்தியமான இந்த முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் குமுறலாகவும், கோபமாகவும் சொல்வதே ‘வல்லமை’.

பிரேம்ஜி நன்றாக நடித்திருக்கிறாரா? என்று பார்ப்பதை விட, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருப்பதையே பாராட்டலாம். ஏதோ வந்தோம், கையை அசைத்தோம், நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம்,சில வசனங்கள், பல ரியாக்‌ஷன்க்ள் என்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக நடிக்க கூடிய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் மனுஷன் நடிக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சியை தாராளமாக வரவேற்கலாம்.
பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிதீர்ப்பதற்கு எடுத்த முடிவு அதிர்ச்சியளித்தாலும், தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயம் கனக்கச் செய்கிறது.

சினிமாவில் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அரிதான ஒரு கதை பிரேம்ஜிக்கு இப்படத்தின் வாயிலாக கிடைத்திருக்கிறது. அதை செவ்வனே செய்தும் முடித்திருக்கிறார் பிரேம் ஜி.தான் ஏழை என்பதை உடுத்தும் உடையிலும் காண்பித்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் இன்னும் ஒன்றி போயிருக்கலாம்.

சிறுமியாக நடித்த திவதர்ஷினி மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். தனது தந்தையோடு அமர்ந்து பேசும் இடத்திலாகட்டும், தனது தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கவலைப்படும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சி ஆர் ரஞ்சித், க்ளைமாக்ஸ் காட்சிக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார்.படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சரியாகத் தான் செய்திருக்கிறார்கள்.

ப்ளாஷ் பேக் காட்சி எது நிகழ்கால காட்சி எது என்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டு விட்டது. கதையை விட்டு சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்குள் வந்தது சற்று சோர்வடையவைத்துவிட்டது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பலம் தான்.படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது வசனம் தான். ஆங்காங்கே, தனது வசனத்தின் மூலம் சாட்டையை சுழற்றியிருக்கிறார் இயக்குனர்.ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் எல்லோரையும் கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.நல்ல கதையைக் கொடுத்த இயக்குநரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்