தொகுதி பங்கீட்டில் கறார் காட்டிய அதிமுக – செம கடுப்பில் பாஜக!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கறார் காட்டி உள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இரண்டாவது நாளாக இன்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதில், பாஜகவின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகளவில் போட்டியிட பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன், பாஜகவினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். கோவை, நாகர்கோவில், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், 20 சதவீத இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும் அதிமுகவிடம் பாஜக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு, 20 சதவீத இடங்களில் போட்டியிட அனுமதிக்க முடியாது என, பாஜகவிடம், அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், வேண்டுமானால், சுமார் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் இடங்களில் போட்டியிட்டு கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டதாகவும், எந்தெந்த மாநகராட்சிகளில் எந்தெந்த இடம் வேண்டும் பட்டியலை கொண்டு வாருங்கள் ஆலோசிப்போம் என்றும் பாஜகவிடம் அதிமுக கறாராக கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் 80 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட விருப்பம் தெரிவித்த இடங்களில், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக வெளியான அதிரடி அறிவிப்புதான் கூட்டணி காட்சிகள் மாறியதற்கு காரணம். அதிமுக செய்த அவமரியாதையால் அதிர்ந்துபோன கம்யூனிஸ்ட்கள் தேமுதிக தலைமையில் மூன்றாம் அணி அமைக்க முயற்சித்ததும், அப்போது விஜயகாந்த் கம்யூனிஸ்ட் தலைவர்களை கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்துவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாக ஆனதெல்லாம் வேறு கதை.
அந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்களுக்கு அதிமுகவால் நேர்ந்த அவமானத்தை போலவே, தற்போது பாஜகவுக்கு நேர்ந்துள்ளது என எண்ணும்படி உள்ளது இவ்விரு கட்சிகளுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலையொட்டி நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள்.
பாஜக சற்று வலிமையாக உள்ள கொங்கு மண்டலம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு மேயர் சீட்டுகள், பேரூராட்சி, நகராட்சி பதவிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது.கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ள நிலையில், தங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை கேட்டு பெற பாஜக முயற்சிப்பதில் அரசியல் ரீதியாக எந்த தவறும் கிடையாதுதான்.
ஆனால், பாஜக கேட்கும் இடங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு தருவதற்கு அதிமுக கொஞ்சமும் தயாராக இல்லை. என்னதான் பாஜக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கதான் லோக்கல் வெயிட் எனும் சொல்லும்படி கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக கெத்து காட்டி வருகிறது.
இடபங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கறாராக இருப்பதை தாண்டி, கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துள்ளது. அதாவது, 2011 சட்டமன்ற தேர்தலின்போது கம்யூனிஸ்ட்டுகள் உடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், எப்படி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டதோ, அதே பாணியில் தற்போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதா ஸ்டைலில் வேட்பாளர் பட்டயலை ஓபிஎஸ -இபிஎஸ் வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கட்சித் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கையால், கூட்டணி பாஜகவுக்கு இருக்கும் மரியாதை என்ன? என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது பாஜகவின் பதிலாக இருக்குமா அல்லது கேட்ட இடங்கள் கிடைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தனித்துப் போட்டியிடுமா? என்று ஒரிரு நாளில் தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கூட்டணி கட்சியான பாஜகவுடன் இதுவரை இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.