கோவையை கைப்பற்றும் திமுக.. பயத்தில் எஸ்.பி வேலுமணி.. ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி..

எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. பின்னர் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் தமிழகத்தின் தனக்கான தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவும் கொங்கு மண்டலத்திலேயே தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் கொங்குவில் பாஜகவின் அரசியல் கணக்கு வேலை செய்ய தொடங்கியுள்ளது. இதே நேரத்தில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் இக்கூட்டணி வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை கைப்பற்றியிருந்தால் கொங்குவில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.

கொங்கு எப்போதுமே திமுகவுக்கு கைகூடாத கோட்டையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன்னரே மகேந்திரன் திமுகவிலிருந்து இருந்திருந்தால் கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்க முடியும் என ஸ்டாலினே வெளிப்படையாக கூறினார். அந்த அளவுக்கு கொங்கு திமுகவுக்கு எட்டாக் கனியாக இருந்து வருவதுதான் அதற்கு காரணம். குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் என மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் கோவை தெற்கு பகுதியை மட்டும் பாஜக கைப்பற்றியது. மீதமுள்ள 9 தொகுதிகளிலும் அதிமுகவே அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக தங்கமணி, வேலுமணியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிமுக என்பது நமக்கான கட்சி என்ற மனநிலை கொங்கு பகுதி மக்களிடையே உருவாகியிருப்பதே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் போனது திமுகவுக்கு பெருத்த அடியாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. என்ன செய்தால் கொங்கு மண்டலத்தில் கொடியேற்ற முடியும் என்ற குழப்பம் திமுகவுக்கு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்குள் கொங்குவை கைப்பற்றியே ஆக வேண்டும் முனைப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், எதிர் வருகிற மேயர் தேர்தலிலாவது கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்று கணக்கு போட்டுவரும் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அதற்காக கோவை பகுதியிலேயே தங்கியிருந்து கோவையில் திமுகவின் செல்வாக்கு உயர்த்த செந்தில்பாலாஜி அயராது பாடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக வில் ஓரங்கட்டப்பட்ட அடிப்பட்ட புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி களமிறங்கி காய் நகர்த்தி வருகிறார்.

கோவை மாவட்டத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் களத்தில் இறங்கி இருக்கின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மொத்தம் 900 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக சார்பாக 2014 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை நாகராஜன் எம்பி திமுகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய வார்த்தை கொங்கு அதிமுகவின் கோட்டை என்று மிதப்பில் இருந்து வந்த வேலுமணி, தங்கமணி போற்றேருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை நாகராஜன் பேசியதாவது:- கோவை மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார், கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டையாக மாற்றுவதற்காக அள்ளும் பகலும் பணியாற்றுவேன். ராமனுக்கு அணில் போல கோவை மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு முதல்வருக்கு துணையாய் நின்று கோவை மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றுவேன்.

ஆரம்பத்தில் இருந்தே வேகமாக செல்லும் செந்தில் பாலாஜி, தற்போது அசுர வேகத்தில் வேலை செய்து வருகிறார் என்று  கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, கோவையை கைக்குள் கொண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. எதிர்முகாமான அதிமுகவில் இப்போது வரை யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.குறிப்பாக எஸ்.பி வேலுமணியின் அமைதியை யாரும் எதிர்பாராத ஒன்று என்கின்றனர்.இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘கடந்த மாதம் அதிமுக  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரஸ் மீட்டில் பேசியதுக்கு பிறகு தான், இந்த அமைதி ஏற்பட்டிருக்கிறது. 

அதற்கு முன்னால் வரை கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த அண்ணன் எஸ்.பி.வேலுமணிக்கு, மேலிடத்தில் இருந்து வந்த குடைச்சல் காரணமாக தேர்தலில் வென்றால் என்ன ? தோற்றால் என்ன ? என்ற மன நிலைக்கு வந்துவிட்டார். அன்று பிரஸ் மீட்டில் வேலுமணி பேசியது என்னவென்றால், ‘ எதுக்கெடுத்தாலும் குறை.. என்னையேதான் ஏதாவது பழி சொல்லிட்டே இருக்காரு.. ஓபனா சொல்லணும்னா, நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்னாங்க. அதுக்கு நான் எப்பவுமே ஒரு நியாயமான பதிலை சொல்லுவேன். அவர் கடுமையா என்னை பேசியிருக்கிறார்.  ஆனால், நான் அப்படி பேசியதில்லை. அதுக்கப்பறம் எடப்பாடி அண்ணன் ஆட்சியை காப்பாற்ற, 4 வருடம் தொடர்ந்து ஆட்சியை நடத்த, நானும், தங்கமணி, சிவி சண்முகம் எல்லாரும் பார்த்துக்கிட்டோம்.

அதாவது ஆட்சி மாற்றம் ஏற்படாமல் நான்தான் எடப்பாடி அண்ணனுக்கு சப்போர்ட்டா இருந்தேன். இதுல நான் தீவிரமா இருந்தேன். இதுதான் என் மேல கோபம். கோயம்புத்தூரில் 10-ல் 10-க்கு ஜெயிச்சிட்டோம். இதுக்கு காரணம் மக்களுக்கு எல்லாமே செய்து தந்தோம். இதுதான் திமுகவுக்கு 2வது கோபம். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கினேன். ஆனால், இப்போ திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

என் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழிக்கிறார்கள். 60 இடங்களில் சோதனை செய்தார்கள். நாங்கள் ஒத்துழைப்பு தந்து கொண்டுதான் இருக்கிறோம். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை, ஆனால் கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார். இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. 

இப்படி எஸ்.பி.வேலுமணியின் புலம்பலுக்கு முக்கிய  காரணம், லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடிச்சுருக்க ஆதாரங்கள் தான். முக்கியமான விஷயம் இதுல என்னென்னு பார்த்தா, அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படியாவது கோவையை கைப்பற்றனும்னு வேலை செஞ்சுட்டு இருக்காரு.  வேலுமணி தன்னோட முழு செல்வாக்கையும் பயன்படுத்தி கோவை மேயர் தேர்தலில் ஜெயிச்சிட்டா, நம்ம மேல இருக்குற நம்பிக்கை முதல்வருக்கு போயிடும்னு பயப்படுறாரு. 

அதனால தான், முதல்வர் கிட்ட எஸ்.பி.வேலுமணியை எந்தெந்த வழியில மடக்கலாம்னு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துருக்காரு. விரைவில் அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்படுவார் என்று திமுக வட்டாரங்களில் பேசிக்குறாங்க. அதனால தான் எஸ்.பி.வேலுமணி பெரிய அளவுக்கு வேலை செய்யாமல், அமைதியாக இருக்கிறார்.நிச்சயம் கோவை மாவட்டத்தினை திமுக எளிதில் கைப்பற்றும்.அப்படி அதில் ஏதாவது சிக்கல் இருந்தால், எஸ்.பி.வேலுமணி மீது நிச்சயம் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்படலாம் என்று கூறுகின்றனர்.