ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு ?

ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவைகள் வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது.

குறிப்பாக, வரி விகிதங்கள் குறித்த அடுக்குகளை குறைக்கவும் முயற்சிகள் எடுக்குமாறு, இத்துறையினரை, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 12 சதவீத பிரிவையும், 18 சதவீத பிரிவையும் ஒன்றிணைக்கும் முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, இப்படி ஒரு முயற்சி குறித்த பேச்சுகள் வெளிவந்தன. ஆனால், அது நடைபெற வில்லை. இந்நிலையில், இப்போது மீண்டும், இது குறித்த ஆலோசனையில் இறங்கி இருக்கிறது அரசு. இது சம்பந்தமாக மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்படும்.

இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுத்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இந்த வரி அடுக்குகளின் ஒன்றிணைப்பு குறித்து, கவுன்சில் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். தற்போது, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் மற்றும் கூடுதல் வரிகள் என பல அடுக்குகளில், வரி விதிப்புகள் உள்ளன. இவை குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வருகின்றன.இதனால், 12 சதவீதத்தையும், 18 சதவீதத்தையும் ஒன்றிணைத்து, புதிய வரி விகிதம் அறிவிக்கப்படும்.

மேலும், 15வது நிதி ஆணையமும், 12 மற்றும்18 சதவீத பிரிவுகளை ஒன்றிணைக்கும்படி ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் இவற்றை ஒன்றிணைத்து, எத்தனை சதவீதமாக முடிவு செய்யப்படும் என்பது தெரியவில்லை. அது, 14 அல்லது 16 சதவீதமாக மாற்றி அமைக்கப்படலாம். எதுவாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்தே, ஒருங்கிணைப்பு நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.