தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார்

சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நேற்று மாலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர்கள் வசந்தபாலன், சரண், பத்மா மகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இயக்குனர் சரண் பேசும்போது, “பல வருடங்களுக்கு மேலாக சேரனுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு.. எனது பெயருக்கும் அவர் பெயருக்கும் குழப்பங்கள் கூட ஏற்பட்டுள்ளது.. என் படத்தை பார்த்து திட்டி எழுதிய கடிதங்கள் எல்லாம் அவருக்கு போய்விடும்.. அவர் படத்தை பாராட்டி அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எனக்கு மாறி வந்தது எல்லாம் நடந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் என்னுடைய துணை இயக்குனராக பார்த்தேன் ரசித்தேன் படத்திலிருந்து ஜெமினி படம் வரை பணியாற்றியவர். ஒரு கதையைப் பற்றி அவரிடம் தைரியமாக நாம் விவாதிக்கலாம் அந்தக் கதையில் உள்ள பிளஸ் மைனஸ்களை சரியாக கண்டுபிடிப்பார். நான் இயக்கிய படங்களில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தது என்றால் அதற்கு சாய் ராஜ்குமாரும் மிக முக்கியமான ஒரு காரணம். ராஜ்குமார் என்னிடமிருந்து விலகி தனியாக படம் இயக்க சென்றதிலிருந்து என்னுடைய படங்களில் ஒரு கதையை சீரமைக்கும் ஸ்கிரிப்ட் டாக்டர் என்கிற விஷயம் சரியாக அமையாமல் போனது.. அப்போதுதான் அவருடைய அருமை எனக்கு நன்றாகவே தெரிந்தது.. தற்போது நான் இயக்கியுள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்திற்கு கூட அவரைத்தான் அழைத்தேன்..

ராஜ்குமாரை பொறுத்தவரை எப்போதுமே அவர் நாம் உருவாக்கி வைத்திருக்கிற ஒரு ஸ்கிரிப்டில் இருந்து அதைப் புரட்டிப் போடுகிற மாதிரி, ஒரு வீட்டின் நடு செங்கல்லையே உருவுகிற மாதிரி ஒரு விஷயம் சொல்வார்.. அதன்பிறகு அந்த கட்டடத்தை கட்டி எழுப்பும்போது வெறும் வீடாக இருந்த கதை ஒரு நல்ல பங்களா போல மாறி இருக்கும். அந்தவகையில் இந்த படத்தை நான் பார்த்தபோது இது பேசப்படக் கூடிய ஒரு படமாக உருவாகியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த படத்தில் அவர் ஒரு சவாலை எடுத்துள்ளார். அது இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே செய்யாத, தைரியமாக எடுக்காத ஒரு சவால்.. அந்த சவாலுக்கு உறுதுணையாக அவருக்கு கூடவே நின்றுள்ளார் ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு. இந்த படம் வெளியான பிறகு இவர்கள் இருவருடைய உழைப்பும் ரொம்பவே பாராட்டப்படும்” என்றார்.

இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, “எனக்கு குழந்தை பிறந்த தருணத்தில் மட்டுமல்ல, அதன்பிறகு பல நாட்கள் வரை ஒரு நான் ஒரு அப்பா ஆகிவிட்டது போல உணர்ந்ததே இல்லை.. ஆனால் ஒருமுறை என் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் அவரை என் கைகளில் மூன்று மணி நேரம் தூக்கி வைத்துக்கொண்டே அமர்ந்திருந்தபோது தான் நான் என்னை ஒரு அப்பாவாக முழுமையாக உணர்ந்தேன்.. என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமல்ல, சந்தோஷமும் பீரிட்டு வந்தது.. அந்தவகையில் சேரன் சார் தனது படங்களில் காதலனாக நடிக்கும்போது கூட தன்னை அப்பாவாக காட்டுகிற ஒரு நடிகர் என்றுதான் சொல்வேன். இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது.. தன் இதயத்தையும் ஆன்மாவையும் திறந்து இந்த உலகத்தின் முன்னால் துணிச்சலாக நிற்கிற தைரியம் எனக்கு கூட கிடையாது.. ஆனால் தன் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழல்களில் தன்னை ஒரு அப்பாவாக இதயத்தைத் திறந்து தன்னை நிலைநாட்டிக் கொண்ட ஒரு மிக உன்னதமான மனிதர் தான் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொள்ள உள்ளே சென்று விட்டார் என்று என் மனைவி சொன்னதும் எனக்கு பதட்டமாக இருந்தது. பாரதி கண்ணம்மாவும், பொற்காலமும் ஆட்டோ கிராப்பும் எடுத்த உன்னதமான கலைஞன் இவ்வளவு அலைக்கழிக்கின்ற ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இதுவே ஐரோப்பாவில் செய்திருந்தால், ஒரு தீவையே அன்பளிப்பாக கொடுத்து நிம்மதியாக இருங்கள் எனக் கூறியிருப்பார்கள். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை.. அதனால் பிக்பாஸில் போய் நிற்கிறார்.. அதனாலேயே ஒவொரு நாளும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பதட்டத்துடனே பார்த்துக்கொண்டிருந்தேன் ஆனால் எல்லா சூழலையும் நேர்மையான நெஞ்சுரத்துடன் உலகத் தமிழர்கள் முன்பாக நான் உண்மையானவன் நேர்மையானவன் எனது எனம் திறந்து காட்டினார்.. கற்பை நிரூபிப்பது போல நிஜமாகவே நூறு நாட்கள் நெருப்பில் நின்று தனது நேர்மையை நிரூபித்து வெளியே வந்ததற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்றார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ள இர்பான் பேசும்போது, “2017இல் இருந்து எனக்கு சரியான படவாய்புகள் இல்லாதபோது நான் படம் இயக்க செல்லலாம் என நினைத்திருந்த வேளையில் தான் இயக்குனர் சாய் ராஜ்குமார் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.. அவரிடம் இனி நான் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன் என்று கூறினேன்.. ஆனால் என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.. என்னுடைய கண்ணோட்டத்திற்கு எட்டாத ஒரு கதாபாத்திரத்தை இதில் எனக்கு கொடுத்துள்ளார் சின்ன வயதில் இருந்தே இப்படித்தான் பெண்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என நாம் பழக்கப்பட்டிருப்போம். ஆனால் இதில் உச்சபட்சமாக அவற்றையெல்லாம் தாண்டி நடிக்க வேண்டிய சூழலில் தான் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு உள்ளே நுழையவே எனக்கு பல நாட்கள் ஆனது. ஆனால் டப்பிங்கில் பார்த்தபோது எனது கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது தெரிந்தது” என்றார்.

படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது, “எப்போதுமே ஒரு படத்தில் கதைதான் ராஜா.. இந்த படமும் அப்படித்தான்.. இந்த படத்தில் நான் நடிப்பதற்கும் அதுதான் காரணம்.. இன்றைய தேதியில் பெண்கள் தங்கள் வாழ்க்கை குறித்து, சுதந்திரம் குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது.. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் நான் நடித்துள்ள ஒரு சவாலான காட்சியை இதுவரை தமிழ் சினிமாவில் ஒரே ஒருவரைத் தவிர யாருமே நடித்ததில்லை என்று உறுதியாக சொல்வேன்.. சேரன் சார் அப்போதும் இப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும் ஒரு நபர்.. அவருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம்.. இந்த படத்தின் வில்லன் இர்பானால், நான்கு நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது” என்றார்.

இந்த விழாவில் இயக்குனர் சேரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்த என்னை விட மற்ற அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.. காரணம் நான் தேவையான அளவுக்கு வெற்றி, பெயர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்.. ஆனால் என்னும் இந்த உலகத்தில் பாராட்டுக்களை எதிர்நோக்கி அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர் கூட்டம் தான் இங்கே இந்த படத்தில் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்திற்கான திரில்லர் படமாக இது அமைந்துள்ளது.. உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்த படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.. அவர்களையும் அழைத்து வந்து இந்த படத்தை காட்ட வேண்டும்.. அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்கு சமமாக இருக்கும். இந்த வாழ்க்கை சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்சனைகளும் நம் கூடவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.. அப்படி ஒரு பெற்றோராக, அவர்களின் பிரதிநிதியாக தான் நானும் இருக்கிறேன்.

நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்த படம் அழகாக சொல்கிறது.. நான் பல தருணங்களில் என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் நான் என்னுடைய உண்மையாக, நேர்மையாக என் மகளை பார்ப்பதுபோல அவரைப் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கும் இல்லை அந்த விளையாட்டிற்காக அப்படி நடக்கவேண்டிய எண்ணமும் ஏற்படவில்லை. அந்த பாசத்தை நான் பொய்யாக காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது..

படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு படுத்திக் கொள்வது போல இந்த படம் இருக்கும். படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது யாரோ ஒருவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ள தேடுவீர்கள்.. அது உங்களுடைய மகளுடைய, மகனுடைய, மனைவியுடைய, யாரோ ஒருவருடைய கரமாக இருக்கலாம்.. உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.. உங்கள் உறவுகளிடம் இருந்தும் அவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள், பிரச்சனைகளிலிருந்தும் அவை கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும் தயவுசெய்து விலகி நின்று விடாதீர்கள்.. கூடவே சேர்ந்து பயணியுங்கள்..

இந்த படத்தில் நடிப்பது எனக்கு சற்று கஷ்டமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருந்தது.. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு இன்னொரு இணை இயக்குனர் போலவே பணியாற்றியுள்ளார். இந்த படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நிறைய தியேட்டர்கள் கொடுக்கவேண்டும்.. அதிக காட்சிகள் குறிப்பாக குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும் விதமாக மாலை நேர காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு ஆதரவாக வெளியில் இருந்து பேசியவர்களில் இங்கே வந்திருக்கும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்த கருத்துக்கள் அங்கே உள்ளே இருக்கும்போதே என் காதுகளுக்கு வந்தது.. வெளியே வந்த பிறகும் அதை நான் பார்த்தேன்.. என்மேல் கொண்ட அன்பின் மிகுதியால் மட்டுமே அவர் அப்படி பேசியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.. அக்கறை உள்ளவர்கள்தான் நம் பக்கத்தில் வந்து நிற்பார்கள்.. மற்றவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுவார்கள.

தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.. எப்படி அந்த படத்தை அருமையாக படைப்பாக்கம் செய்திருக்கிறார்கள், கமர்சியல் படங்களில் நடித்து வரும் ஒரு நடிகன் எப்படி 50 வயது மனிதனாக தன்னை மாற்றிக்கொண்டு அற்புதமாக நடிக்க முடிகிறது, அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.. அந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்.. ஆனால் இங்கே படங்களை வியாபாரம் செய்வதில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.. சமீபத்தில் ஒத்த செருப்பு படம் வெளியானது.. பார்த்திபன் அருமையான படைப்பாளி.. அதுபோன்ற படம் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டுமே என்கிற ஏக்கம் அவரைப்போல பலருக்கும் இருக்கிறது.. அது போன்ற ஒரு திரைப்படம் தான் இந்த ராஜாவுக்கு செக் படமும்” என்றார்.

இயக்குனர் சாய் ராஜ்குமார் பேசும்போது, “இயக்குனர் வசந்த், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். சரண் சார் சொல்வது போல நான் பெரிய விஷயம் எல்லாம் செய்து விடவில்லை.. ஒரு உதவி இயக்குனராக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன்.. இந்த படம் எனக்கு கிடைப்பதற்கு காரணம் அம்முவாகிய நான் படத்தை இயக்கிய டைரக்டர் பத்மா மகன் தான்.. அவருக்கு வந்த ஒரு வாய்ப்பை தான் அவர் எனக்கு திருப்பிவிட்டு, இன்று என்னை இந்த மேடையில் நிற்கும் அளவிற்கு கொண்டுவந்துள்ளார். இத்தனை வருடங்கள் கழித்து படம் இயக்க வந்தாலும் அதுபற்றி எதுவும் கேட்காமல் நான் சொன்ன கதையை ரசித்து இந்தப்படம் இயக்கும் வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்களுக்கு ரொம்ப நன்றி.. வேறு எதிலும் குறுக்கிடாமல், அவர்களுடைய எல்லா முடிவுகளையும் சேர்த்து நானே எடுக்கும் சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்தார்கள்..

இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய பின்பு, இதில் எங்கள் வசதிகளுக்கு உட்பட்டு என் மனதில் தோன்றிய முதல் நபர் சேரன் தான்.. ஆனாலும் முதல் முயற்சியிலேயே அது செட்டாகவில்லை.. இருந்தாலும் நான் பிடிவாதமாக சேரன் சார் தான் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்தேன்.. காரணம் அப்பா என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதாலும் அவரை எளிதாக ஒரு அப்பாவாக ரசிகர்கள் பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள் என்பதாலும் தான் இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

என் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை, சேரன் சார் இப்போது உலகமறிந்த சேரப்பாவாக மாறிவிட்டார்.. அதன்பிறகு அவர் மீதான கண்ணோட்டமே மாறிவிட்டது.. அப்பா பொண்ணு கதைக்கு சேரன் தான் சரி என நாங்கள் செய்த முடிவு தீர்க்கதரிசனமாக மாறிவிட்டது. ஆனால் இந்த படத்தை ஆரம்பித்த போது இதில் சேரன் எப்படி செட் ஆவார் என்று கூட சிலர் கேட்டார்கள்.. ஆனால் பாட்ஷா படத்தில் எப்படி ரஜினி சாரை தவிர்த்துவிட்டு வேறு யாரையுமே அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாதோ, அதேபோல இந்தப்படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரத்தில் சேரனை தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும் அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்று நீங்களே உணர்வீர்கள்.

அதுமட்டுமல்ல இந்த படத்தில் அவர் நடிப்பதற்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்றும் இருந்தது. ஆனால் அதை சொன்னால் படத்தின் முக்கியமான அம்சமே வெளியாகி விடும் என்பதால், நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த படத்தில் பல காட்சிகளில் அவர் ஒரு தனிநபர் ஆகவே எதிரில் ஆட்கள் உள்ளது போலவே நினைத்து, அவர்களுக்கான ரியாக்சன்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியில் எல்லாம் சேரன் சார் மிகப்பெரிய பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளார்.. இந்த காட்சிகளில் எல்லாம் அவர் சிங்கிள் டேக்கில் நடித்து இருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய விஷயம்..

இந்த படத்தில் நடிப்பதற்கு தயங்கிய இர்பானையும் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன்.. இப்போது நீங்கள் மேடையில் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிற இர்பானை இந்த படம் வெளியான பிறகு வெளியே பார்த்தால் தெறித்து ஓடும் அளவிற்கு இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. நாயகி சிருஷ்டி டாங்கே நடித்திருப்பது மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரம்.. படத்தில் விட்டுவிட்டு அவ்வப்போது காட்சிகளில் வந்தாலும் எந்த காட்சிகளில் சிருஷ்டி டாங்கே வருவார் என்று நம்மால் யூகிக்க முடியாது.. இந்தப் படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியை இதுவரை நீங்கள் வேறு எந்த சினிமாவிலும் பார்த்திருக்க முடியாது.. சினிமாவுக்காக எந்த வித சீட்டிங்கும் அந்த காட்சியில் கிடையாது.. இந்த படத்தின் இசையமைப்பாளர் வினோத் யஜமான்யாவை நான் இந்த படத்தில் மிக்ஸிங்கின்போதுதான் முதன் முறையாக நேரில் பார்த்தேன்.. இந்த படத்தில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.. படத்தில் டைரக்சனை விட பின்னணி இசை பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.

sdc நிறுவனம் சார்பாக உஸ்மான் பஹீத் இந்தப்படத்தை நவம்பர் மாதம் வெளியிடுகிறார்..

Related posts:

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன...

India’s First Arthroscopic Rotator Cuff Repair with Patch Augmentation using ArthroFlex® at Chennai Upper Limb Unit !

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் 'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

TECNO SPARK 50 5G debuts with a massive 6500mAh battery and military grade durability!

"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!

"'தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி!