பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் செயற்கை கருவுறுதல் மையங்கள் பற்றி நமக்கு அதிகமா தெரியாது. ஏன்னா உணவு பழக்க வழக்கங்கள், ஒழுக்கம் இவை இருந்ததால் சுகப்பிரசவத்தில் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள் பெண்கள். ஆனால் இன்றைய உலகில் கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களால் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.இதைச் செயற்கை கருவுறுதல் மையங்கள்சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன.அதனால் பல இடங்களில் செயற்கை கருவுறுதல் மையங்கள் புற்றீசல் போல முளைத்து இருக்கு. இன்னும் பத்து வருஷத்தில் கருவுறுதல் மையங்களுக்கு போனால்தான் குழந்தை பெத்துக்க முடியும் என ட்ராமா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் வரும்போது நாம் சற்று அதிர்ச்சி அடைகிறோம். Trauma என்றால் அதிர்ச்சி என்று பொருள். செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த படம்.
திருமணம் ஆகி பல வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் சுந்தர் (விவேக் பிரசன்னா) மற்றும் கீதா (சாந்தினி). சில மருத்துவ சிகிக்சைகளுக்கு பின் கீதா கர்ப்பமாகிறார். ஒரு நாள் ஒரு மர்ம மனிதன் கீதாவுக்கு போன் செய்து உன் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அப்பா யார் தெரியுமா என மிரட்டி ஐம்பது லட்சத்துடன் நான் சொல்லும் இடத்திற்கு வா என்று பிளாக்மெயில் செய்கிறான்.
இரண்டு கார் திருடர்கள் காரை திருடி கொண்டு போகும் போது போலீஸ் மடக்கி பிடிக்கிறது. கார் டிக்கிக்குள் ஒரு சடலம் இருப்பதை பார்க்கிறது போலீஸ். ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் காதலிக்கிறார்கள். காதலி தன் காதலனை பற்றி அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தெரிந்து கொள்கிறார். மூன்று வெவ்வேறு இடங்களில் செல்லும் கதை ஒரு மையத்தில் இணையும் வகையில் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக டைரக்டர் தம்பிதுரை மாரியப்பன். மேலும் சாதரணமாக காட்சிகளைப் பார்க்கும் போது ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதது போல் ரசிகர்களுக்குத் தோன்றும். ஆனால் காட்சிகளுக்கு நடுவில் சிறிய தொடர்பு இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.. இந்த inter link பாணி திரைக்கதையை நன்றாக கையாண்டுள்ளார் இயக்குநர் என்று சொல்லலாம்.
இந்த திரைக்கதையை மிக சிறப்பாக தனது எடிட்டிங்கால் அழகாக்கி இருக்கிறார் எடிட்டர் முகன் வேல். படத்தின் திரைக்கதையை திரில்லர் போன்று மாற்றியதில் எடிட்டர் பங்கு முக்கியமானது. திரைக்கதை, எடிட்டிங்கில் நேர்த்தியாக உருவாக்கி டைரக்டர் ஒளிப்பதிவில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இசை பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சாந்தினி பதினைந்து வருடமாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுதான் திறமையை நிரூபிக்கும் வகையில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. குழந்தைக்கு ஏங்கும் ஒரு பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் சாந்தினி. “இந்த உலகத்தில் யாருமே வலியை வேண்டாம்னு தான் சொல்லுவாங்க. ஆனால் வேணும்ன்னு நினைக்கிற ஒரே வலி தாய்மை தரும் வலியை மட்டும்தான்” என்று சாந்தினி சொல்லும் போது சாந்தினியை தமிழ் சினிமா டைரக்டர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஹீரோக்கள் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று தேவையான நடிப்பை வழங்கி உள்ளார் விவேக் பிரசன்னா. படத்தில் சில குறைகள் இருந்தாலும் சிறிய கலைஞர்கள் இணைந்து நல்ல கதைக்களத்தில் புதிய முயற்சி செய்ததற்காக டிராமா படத்தைப் பாராட்டலாம்.
“குழந்தை வேணும்ன்னு ஹாஸ்பிடலுக்கு போறவங்க ஒரு பக்கம். தனக்கு பெற்றோர்கள் கிடைக்க மாட்டாங்களா என்று எங்கும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றொருபுறம். குழந்தையில்லா தம்பதிகள் இந்த ஆதரவற்ற குழந்தைகளை ஏன் தன் குழந்தைகளாக வளர்க்க கூடாது?” என்ற வசனம் படம் முடியும் சமயத்தில் வருகிறது. இந்த கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது. உண்மைதான். இந்தப் படத்தின் மூலம் செயற்கை கருவுறுதல் மையத்திற்குச் செல்லும் தாய்மார்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். இயக்குநருக்குப் பாராட்டுகள்…!