அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ,டாக்டர்
ஜி.ஆர்.இரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களுக்கும்,அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும்,நாட்டின் ஒற்றுமை ஒருமைப் பாட்டிற்கும் எதிரானதாகும். இந்தியாவை ,இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.இந்தியா முழுவதும் 20 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.இது பெண்கள் மத்தியில் அச்சத்தையும்,பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறைகளையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்திட வேண்டும்.நிர்பயா நிதியில் 91 % பயன்படுத்தப்பட வில்லை.அந்நிதியை உரிய முறையில் முழுமையாக பயன் படுத்த வேண்டும்.நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இது வரை நிறைவேற்றப்பட வில்லை.மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள போதிலும்,33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாதது கண்டனத்திற்குரியது.கூவம் நதியோர ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில்,ஏழை எளிய மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு அகற்றுவது கண்டனத்திற்குரியது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால் வேலை இழப்பு அதிகரித்துள்ளது.ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது.உழைப்புச் சுரண்டல் தீவிரமடைந்துள்ளது.வரலாறு காணாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது.பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப் படுகின்றன.ஆனால்,தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை.அதை வழங்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நவீன அறிவியல் தொழில் நுட்பம் ,வேலை வாய்ப்புகளை பரித்துவருகிறது.இதனால், இட ஒதுக்கீடும்,சமூக நீதியும் ஏட்டுச் சுரைக்காயாக மாறிவருகிறது.
எனவே,இப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ,அனைத்திந்திய முற்போக்குப் பேரவை சார்பில் ,வரும் ஜனவரி 24 முதல் 26 வரை ,சமூக நீதி குறித்த தேசியக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்,ஏஐபிஎஃப் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, தொழிற் சங்கத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.துரைசாமி,டாக்டர் ஜி.ரமேஷ்,டாக்டர் என்.வெங்கடேஷ்,பேராசிரியர் கதிரவன்,டெய்சி, ராமுகண்ணன்,மகேஷ்,ஜாஹிர் உசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
