வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால், இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே இருப்பதால் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலதும் திணறி கொண்டு வருகின்றன. இதில் தற்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின் நாட்டிற்கு அடுத்து அமெரிக்கா தான் விபரீதத்துக்குள்ளாகியுள்ளது .
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 1500 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரம் அல்லது சில நேரங்களில் 2 வாரங்களுக்கு முன்பே கூட முன்பதிவு செய்யப்படுவதாக, ப்ரூக்கிளின் கல்லறை உரிமையாளரான பேட் மோர்மா கூறியுள்ளார் . அதிலும் தற்போது அதிகரித்து வரும் பிணங்களை கையாள முடியாமல் அமெரிக்கா திணறி வருவதுடன் கல்லறை, தகனக்கூடங்கள் கிடைக்காமல் அந்த கூடங்களுக்கு வெளியே டிரக்குகளில் குளிர்சாதனப் பெட்டி அமைத்து பிணங்களை வைத்துள்ளனர்.
