சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அம்மன் கோயில்கள் பல இருந்தாலும், சொல்லும்போதே மனதில் வைராக்கியத்தையும், உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆறுதலையும் அளிக்கும் அம்பாள் என்று சொன்னால், ‘மாங்காடு காமாட்சி அம்மனையும், திருவேற்காடு தேவி கருமாரியம்மனையும், திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், பாரிமுனை காளிகாம்பாளையும் தான் சொல்வார்கள்.
ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் இந்த மாங்காடு. தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இரங்கிய ஈசன், இதற்குப் பின்புதான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார் என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சிகாமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அப்படித்தான் மாங்காடுகாமாட்சி அம்மனும்.
இந்த கோவிலில் ‘அர்த்தமேருஸ்ரீசக்கரம்’ மிகவும் விசேஷமானது. தீப்பிழம்புகளுக்கு இடையே ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, ஈசனை நினைத்து கண்களை மூடிய நிலையில் அம்பாள் இருப்பதை இத்தளத்தில் காணலாம். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அம்பாளை நான்கு வடிவில் தரிசிக்க முடியும். ஸ்ரீ சக்கர வடிவில் அம்பாள், பஞ்சலோகத்தாலான காமாட்சியம்மன், அக்கினியில் தவம் செய்யும் காமாட்சி அம்மன், காமாட்சி அம்மனுக்கு அருகில் அணையாமல் ஜோதி வடிவில் எரிந்துகொண்டிருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு. இவை நான்கையும் அம்மனின் அம்சமாகவே கருதி வழிபடுகிறார்கள்.
இந்த உலகம் செயல்படுவது அந்த ஈசனின் பார்வையினால் தான். அப்படி இருக்கும்போது அந்த எம்பெருமானின் கண்களை ஒருமுறை விளையாட்டாக பார்வதிதேவி மூடி விட்டாள். எம்பெருமானின் இருகண்களும் மூடப்பட்ட ஒரு நொடி என்பது, நமக்கு ஒரு யுகம் ஆகும். பூலோகம் இருண்டது. சூரியன் சந்திரன் ஒளிரவில்லை. தேவியின் விளையாட்டு வினையாகி விட்டது. கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் சிவபெருமான். இதனால் தேவியை, பூலோகத்தில் மனித பிறவி எடுத்து, தவம் புரிந்து பின்பு தன்னை வந்து சேரவேண்டும் என்ற சாபத்தை கொடுத்துவிட்டார் சிவபெருமான். பூலோகத்தில் மனித பிறவி எடுத்த தேவி, மாமரங்கள் நிறைந்த இந்த மாங்காட்டினை தேர்ந்தெடுத்து, நெருப்பின் மத்தியில் கடும் தவம் புரிந்து, காஞ்சிபுரத்தில் காமாட்சியாக அந்த ஏகாம்பரேஸ்வரரை மணந்தார். மாஞ்சோலைகள் நிறைந்த இந்த இடம் மாங்காடு என்றும், அம்மன் தவம் இருந்ததால் மாங்காடு காமாட்சி அம்மன் என்றும் இக்கோவிலுக்கு பெயர் வந்தது. ஆனால் தேவி ஈசனை மணந்த பிறகும் இந்த இடத்தில் இருந்த வெப்பமானது சிறிதும் தணியவில்லை. வறட்சியோடு தான் காணப்பட்டது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இந்தப் பகுதியை செழிப்பு மிக்க பகுதியாக மாற்றினார்.
ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்த பின்புதான் அந்த அம்மனின் கோபம் தணிந்தது. இதனால்தான் இந்த இடத்தில் ஸ்ரீ சக்கரத்தை மூலஸ்தானத்தில் அம்பாளின் ரூபமாக வழிபட்டு வருகிறார்கள். பலன்கள்: இந்த கோவிலில் தேவி ஈசனை மணம் முடிப்பதற்காக தவமிருந்து மணக்கோலம் பெற்றதால், திருமணமாகாதவர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ நாட்கள் ஆகும். பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறுவாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.
செல்லும் வழி: கோயம்பேட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், தாம்பரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 06.00AM – 01.00PM மாலை 04.00PM – 09.30PM முகவரி: அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101, காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி: +91-44-2627 2053, 2649 5883.