கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா ! அரசு பரிசீலனை !!

கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் அதற்கான இழப்பீடு தொகையை கோவிலுக்கு வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கன்னன்குறிச்சியைச் சேர்ந்தராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:வருவாய் துறை பிறப்பித்த உத்தரவில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி அவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவது குறித்தும் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும் பச்சைக் கொடி காட்டுகிறது.அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களையும் சமமாக பார்க்க முடியாது.கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவது அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வருவாய் துறை துணைச் செயலர் ஆனந்தன் தாக்கல் செய்த பதில் மனு:கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தால் அந்த ஏழை குடும்பங்களின் நலனை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக கோவில் நிலத்தை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதுகுறித்து மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக திட்டம் வகுத்து அரசுக்கு அனுப்பப்படும்.அரசிடம் உத்தரவு பெற்ற பின் வரன்முறை செய்யப்படும். வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதனால் கோவில் அதிகாரிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும்.குறிப்பிட்ட நிலம் கோவிலுக்கு தேவைப்படவில்லை என்றால் தகுதியான ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிசீலிக்கலாம்.அதற்கான இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வழங்கப்படும்.கோவில் நலன் கருதி கோவில் நிலத்தில் இருந்து வருமானம் வர ஏதுவாக அமலில் உள்ள விதிகளின்படி இழப்பீடு வழங்க முடிவெடுக்கப்பட்டது.வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை தெரிவிப்பதற்கு போதிய காரணங்கள் இருந்தால் அதை அரசு அதிகாரிகள் பரிசீலிப்பர்.கோவில் நலன்களை பாதுகாக்க ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் வழியாக தான் அரசுக்கு திட்டங்கள் அனுப்பப்படும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.