”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை சிம்ரன். அழகும், அசாதாரண நடிப்புத் திறனும் இயல்பாக ஒன்றிணைந்த கலைஞர் அவர். திரையில் அவர் வெறுமனே வந்துபோகாமல், மென்மையான தென்றலாய், தலைமுறைகள் கடந்தும் மனதில் நிற்கும் நினைவுகளை விட்டுச் சென்றார். அவரது அமைதியில் கம்பீரம் இருந்தது. அவரது புன்னகையில் மகிழ்ச்சி இருந்தது. அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் தங்களை உணர்ந்தார்கள்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக வெற்றிகரமான திரைப்பயணத்தைத் தொடர்வது என்பது திறமையால் மட்டும் சாத்தியமல்ல. அதற்கு அசாதாரண ஒழுக்கம், தொழில்முறை அர்ப்பணிப்பு, காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவை அவசியம். சிறந்த இல்லத்தரசி, அன்பான தாய், வெற்றிகரமான தொழில்முனைவோர் என ஒவ்வொன்றிலும் அதே அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதுதான் அவரது வெற்றிக்கு காரணம். அதனால்தான், அவரது வசீகரம் காலப்போக்கில் குறையாமல் மேலும் மெருகேறியுள்ளது.

கதாநாயகியாக பல வெற்றிகளை பார்த்திருந்தாலும் கூட, காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்து சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை இன்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைக்கிறார். தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டதாவது, “சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது ‘பேட்ட’ திரைப்படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஊக்கம்தான் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு உதவுகிறது. ‘கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்றார்.

தனது வசீகரத்தாலும் நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தது முதல் பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது வரை காலத்திற்கேற்றாற்போல தன்னை புதுப்பித்துக்கொள்ள என்றுமே நடிகை சிம்ரன் தயங்கியதில்லை. தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் அவர் நிலைத்து நிற்க இதுவே காரணம்.1997, ஜூலை 4 அன்று வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ ஆகிய படங்களின் மூலம் தனது தமிழ்த் திரையுலகில் அறிமுகமான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் முன்னணி நாயகியாக தன்னை திரையுலகில் நிலைநிறுத்தியுள்ளார்.

 

Related posts:

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'VD12''கிங்டம்'படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

பேட்டில் – திரை விமர்சனம்.!

*யுனிவர்சல் மியூசிக் இந்தியா, அனிருத் ரவிச்சந்தரின் புதிய இசைப்பதிவு நிறுவனமான அல்புகர்க்கு ரெக்கார்ட்ஸ் உடன் பிரத்யேக கூட்டாண்மையை அமைத்துள்ளது* முன...

நடிகர் மோகன் நடிக்கும் 'ஹரா' பட டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் 'சின்ன ...

தி நகரில் அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி முகாம் !

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான 'கிகி & கொகொ'!