தமிழ் சினிமாவில் மர்மத் திரில்லர் கதைகள் ஏராளமாக வந்துள்ளன!. ஆனால், ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள் என்ற ஒற்றை வரிக் கதையை மையமாக வைத்து, ஒரு பெண் கொலைகளைச் செய்யும் அளவுக்கு துணிவாளா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அதன் பின்னணியில் மனித மனதின் இருண்ட பக்கங்களை ஆராய முயற்சித்திருக்கும் படமாக உருவாகியுள்ளது ‘அந்தரன்’.
கதையின் நாயகி இவானா வருணை திருமணம் செய்யவிருக்கும் சில இளைஞர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள். கொலைகளைச் செய்தவர் அல்லது செய்தவள் பெண்ணா என கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான நாயகன் பிரஜின் வருகிறார். அவரது விசாரணையில் பல அதிர்ச்சிகள் அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்குமே ஏற்படுகிறது. இந்த புலன் விசாரணை முடிவில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை?
நாயகனாக பிரஜின் அமைதியாக நடித்துள்ளார். அவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பெரும்பலம். அறிமுக நாயகி இவானா வருண் நடிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஓரளவு தேறியுள்ளார். அனுபமா குமார், செந்தில்குமாரி, ஐஸ்வர்யா கண்ணன், ஆதிரன், தண்டபாணி என ஏனைய கேரக்டர்களும் ஓரளவு நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் ஹரி ஆர்.எஸ் பின்னணி இசையில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். பாடல்களும் பரவாயில்லை தான். ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன் குறைந்த பட்ஜெட்டிலும் கண்ணுக்கு அருமையான விஷுவலை கொடுத்துள்ளார்.!
படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராகவன். படத்தை எங்குமே தொய்வடைய விடாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் . இன்னும் சில உணர்ச்சிகரமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். கொலைகாரன் யார் என்று தெரியவரும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஆச்சரியமும்,அதிர்ச்சியும் ஏற்படுகிறது
மர்மம், பதற்றம் மற்றும் உளவியல் திரில்லர் அம்சங்களை இணைத்து, இறுதிவரை என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் விதமாக படமாகியிருக்கும் ‘அந்தரன்’ வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை தேடும் ரசிகர்கள் ஒருமுறையாவது கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது.
