நீளிரா–திரைப்பட விமர்சனம்!

தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘நீளிரா’ ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.

விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.

ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போர்ச்சுழலில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன ஆனது ? என்பதை கமர்ஷியல் திரைப்படத்திற்கான விறுவிறுப்புடனும், ஈழ மக்கள் எதிர்கொண்ட மன போராட்டங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் விதத்திலும் சொல்வது தான் ‘நீளிரா’.

இந்திய அமைதிப்படையின் கேப்டனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா மற்றும் போராளிப் படையின் கேப்டனாக நடித்திருக்கும் சனத் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி நடித்திருக்கிறார்கள ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் ஈழ பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருப்பதோடு, ஒரு சில வசனங்கள் மூலமாக அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அத்துமீறிய செயல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீது இருக்கும் பயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறார்கள்.நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இரவில் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களையும், அவர்களது இக்கட்டான சூழல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பதற்றத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்தி அவர்களிடத்திலும் பெரும் பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். கே இசையில் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும், ஈழ மக்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் உயிரூட்டும் விதமாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒரு வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த கதைக்குள் இருக்கும் உலக அரசியலையும், ஈழ மக்களின் வலியையும் படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் காட்சிகளை சிறப்பாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.

எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கிறார். யுத்தமும், இரத்தமும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், அம் மக்கள் அனுபவித்த வலியை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்து, படம் முழுவதும் ஒருவித படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த வலிகளை காட்சிப்படுத்திய திரைப்படங்களுக்கு மத்தியில் முதல் முறையாக அமைதிப்படை என்ற பெயரில் அங்கு அட்டூழியம் செய்த இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், வசனங்கள் மூலம் அவர்கள் சமாதானம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சண்டையிட்டதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

போராளிகளின் காதல் மற்றும் அவர்களின் கனவுகள், ஈழ மக்களின் பூர்வீகம், அவர்களின் உரிமைகள் பறிப்பு, அவர்கள் ஆயுதம் ஏந்தியதன் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம், என ஈழ போராட்டத்தின் முழு வடிவத்தையும் ஒரு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் மிக தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் சோமிதரன், எதையும் பிரச்சாரமாக பேசி காட்சிகளின் நீளத்தை நீட்டிக்காமல், அனைத்தையும் சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பேசியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஈழப் போர் மற்றும் அதனால் ஈழ மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை இரத்தமும், சதையுமாக சொல்லவில்லை என்றாலும், அவர்கள் எதிர்கொண்ட வலியை படம் பார்ப்பவர்களிடத்தில் எளிதில் கடத்தியிருக்கும் இயக்குநர் சோமிதரன், அதை சுவாரஸ்யம் மிக்க திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் மூலம் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்.