திரைப்படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நாயகன் உதய் கார்த்திக், தயாரிப்பாளரை தேடி அலைகிறார். அவரது தேடலுக்கான வெற்றியாக தயாரிப்பாளர் ஒருவர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன் வருகிறார். மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்கும் உதய் கார்த்திக்கிற்கு சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் உதய் கார்த்திக், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து வருந்தும் போது, அவரது குடும்பம் அவரது லட்சியத்திற்கு துணை நிற்கிறது. குடும்பத்தின் துணையோடும், உதவியுடம் மீண்டும் தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கும் உதய் கார்த்திக் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘ஃபேமிலி படம்’.
’டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்த்த உதய் கார்த்திக், லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறும்படம் இயக்கிய அனுபவத்தோடு, நல்ல கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலையும் அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை நம்ப முடியாமல் மகிழ்சியில் மூழ்குவதும், அதே வாய்ப்பு சூழ்ச்சியால் பறிபோன பிறகு தடுமாறுவதும் என்று நேர்த்தியான நடிப்பின் மூலம் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு முழுமை சேர்த்திருக்கிறார்.
நாயகனின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு, எளிமையான பணி என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தம்பியின் முயற்சிகளுக்கு துணையாக நிற்கின்ற வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
நாயகனின் நண்பராக, நடிகர் அஜித் ரசிகராக நடித்திருக்கும் சந்தோஷின் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பில் நகைச்சுவை தாண்டவம் ஆடுகிறது. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவது உறுதி.மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, அனீவியின் இசை, சுதர்சனின் படத்தொகுப்பு, அஜீஷின் பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப பணியும் படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
திரைப்படம் இயக்கும் முயற்சியில், தயாரிப்பாளரைத் தேடும் உதவி இயக்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வலிகள், அவமானங்கள் ஆகியவற்றை சொல்லும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியிருந்தாலும், அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் துணை நின்று தோள் கொடுத்தால், அவர்கள் எதையும் எளிதாக சாதிக்க முடியும், என்ற மெசஜோடு சொல்வதோடு, அதை ஜாலியாகவும், இதயம் கனக்கச் செய்யும் குடும்ப செண்டிமெண்டுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், ஒரு எளிமையான கருவை மக்கள் ரசிக்கும் திரைக்கதையாக்கி, ரசிக்க வைக்கும் படமாக தன்னால் இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை என்றாலும், குடும்ப காட்சிகளை சீரியல் போல் படமாக்காமல், இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் வித்தையை சர்வசாதாரணமாக செய்திருக்கும் இயக்குநர் செல்வ குமார் திருமாறன், கமர்ஷியல் மசாலாவை அளவாக பயன்படுத்தி அமர்க்களமான படமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.