கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. ‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கப் பத்திரிகைகளான, ‘நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த, சீனாவில் பணியாற்றும், 13 செய்தியாளர்கள், சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ நிருபர் ஏமி கின், தன் டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகர் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து என் வாயிலாக உலகத்துடன் பேச விரும்பினர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சீன அரசுதான் பொறுப்பு எனக் குற்றம் சாட்டினர். பல்வேறு மோசமான நினைவுகளுடன் சீனாவிலிருந்து நான் வெளியேறுகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, பல்வேறு தகவல்களை சீன அரசு மறைத்தது. அதை வெளியிட்ட சீனா பத்திரிகையாளர்கள் மாயமாக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் உண்மையை வெளியிட்டதால்தான், சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
