பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் ‘குமார சம்பவம்’ . குமரன் தங்கராஜன், துணை வேடங்களில் பாயல் ராதாகிருஷ்ண ஷெனாய், ஜி.எம். குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராஜாமணி படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் .
இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன், தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்து வருகிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. குமரனின் தாத்தா வரதராஜன் மீது அதிக நெருக்கம் காட்டும் காரணத்தினால அவரை சகித்துக் கொள்கிறார். பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியும் எதுவுமே கைகூடாததால் தனது படத்தை தானே தயாரிக்க முடிவு செய்கிறார். இதற்காக தனது தாத்தாவிடம் வீட்டை விற்க சொல்கிறார். இப்படியான நேரத்தில் தான் வரதராஜன் மர்மமான முறையில்
கொலை செய்யப்படுகிறார். குமரன் வீட்டை விற்று தனது படத்தை இயக்கினாரா? வரதனை கொன்றது யார் என காவல் துறை விசாரணையின் வழியாக சொல்லப்படுகிறது குமார சம்பவம் படத்தின் கதை.
குமரன் இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் அதே நேரம் ஹீரோ இமேஜையும் பேலன்ஸ் செய்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது. ஜி.எம்.குமார் இளங்கோ குமரவேல் எப்போதும் போல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். பால சரவணன் , வினோத் சாகர் கவனமீர்க்கிறார்கள். கதையின் தன்மையை மீறாத பின்னணி இசையை வழங்கியுள்ளார் ராஜாமணி. வரதாவை கொன்றது யார் என்பது இறுதியில் காட்டப்படுகிறது.
வித்தியாசமான, கலகலப்பான காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ஆனால், சலிப்புத் தட்டும் திரைக்கதை படத்தின் பலவீனமாக உள்ளது. சில காட்சிகள் சீரியல் போல நகர்வதால், ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வழக்கமான கதைக்களமாக இருந்தாலும், அதில் புதுமையான காட்சிகளைப் புகுத்தி இயக்குநர் பாலாஜி வேணுகோபால் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். இளங்கோ குமரவேலின் இறப்புக்கான காரணம் சொல்லப்படும் இடம் புதுமையாக உள்ளது.’குமார சம்பவம்’ படத்தைப் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்!
