நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

மின்சார வாகனங்களில் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சார்ஜ் செய்வதற்கான இடங்கள் குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தவும், இரண்டாம் கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் நடைமுறைப்படுத்தவும் எரிசக்தித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டே வழிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதால் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.