ஒரு மனிதரில் இருந்து 406 பேருக்கு கொரோனா பரவும்! ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை !!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது;

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2500 ரயில் பெட்டிகள் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 152 விமானங்கள் மூலம் அத்தியாசிய பொருட்கள் அனுப்பட்டுள்ளது.

இதன் மூலம் 200 டன்கள் அளவிற்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஊடரங்கு உத்தரவை ஒருவர் பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு பரப்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.