விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை துவங்கி உள்ளது.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறைஇவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட, அரசு கட்டிடங்களை, சுகாதார துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து, அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ உடன், சுகாதார துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதில், 100 சதவீத வீடுகளும் விற்காமல் அல்லது ஒப்படைக்கப்படாமல் இருக்கும் வளாகங்களை மட்டுமே, கொரோனா முகாம்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், இது தொடர்பான பேச்சு நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.
