15 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் !

15 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது லாலு பிரசாத், ரெயில் நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். நீடிக்கவில்லை, படிப்படியாக பிளாஸ்டிக் மற்றும் காகித ‘கப்’ பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது பிளாஸ்டிக் கப் மற்றும் தட்டுகள் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது இல்லை என்ற எண்ணமும், விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, ரேபரேலி ரெயில் நிலையங்களில் டீ, காபி, உணவுப்பொருட்கள் தயாரித்து அளிக்கிறவர்களிடம் மண் குவளை, தம்ளர்கள், தட்டுகளை பயன்படுத்துமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகளை பயணிகளுக்கு உணவுப் பொருட்கள், தேநீர், பால் ஆகியவற்றை வழங்க பயன்படுத்த வேண்டும் என்று மண்டல ரெயில் நிலையங்கள், ஆர்சிடிசியை கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, வாரணாசி ரெயில் நிலையங்களில் அமலுக்கு வருகிறது. இதுபோன்று நாடு முழுவதும் அமல்படுத்தலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.லட்சக்கணக்கான மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கும் என காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.