கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?

ஃப்ரான்சில் வசிக்கும் இரயாகரன் ஒரு ஈழத் தமிழர். ‘புதிய ஜனநாயக மக்கள் முன்னணி” எனும் பெயரில் அரசியல் சிந்த்aனைகளைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரப்பி வருகிறார். அவர் தற்போது கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு ஃப்ரான்சில் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். 2 குழந்தைகளும் பாதிக்கப்ட்டுள்ளனர். யாரேனும் ஒருவர் மரணமடைந்து மருத்துவமனையில் இடம் காலியானால்தான் இன்னொருவர் ‘அட்மிட்’ ஆகலாம் என்பதுதான் இந்த “வளர்ச்சி” அடைந்த நாடுகளின் இன்றைய நிலையும். இந்த இக்கட்டான நேரத்திலும் அவர் கீழ்கண்டவாறு சமூக உணர்வுடன் பேசுவது நம்மைக் கண்கலங்க வைக்கிறது :

“எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ இந்த நாட்டில் மருந்தில்லை.என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது.மனிதனாக மனிதனை மதிக்காத சிந்தனைகள், கோட்பாடுகள் – அனைத்தையும் தன்னிலையில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கின்ற தனிமனித வாதங்கள், ஒட்டுமொத்த சமூகம் குறித்தோ, இயற்கையைப் பற்றியோ, இயற்கையின் பிற உயிர்கள் குறித்தோ அக்கறையற்ற வரட்டுவாதங்கள் – இன்று எத்தனை மனிதர்களை பலியெடுத்துக் கொண்டு இருக்கின்றது. சமூகம் என்ற வகையில் நாங்கள் எல்லாம் குற்றவாளிகள். சமூகத்தை மாற்ற என்ன செய்தோம்!?அரசுகள் முன்னெடுத்த வைரஸ் நடவடிக்கை, மருத்துவ அறிவியல், வைரஸ் பரவல் பற்றி அரசு மக்கள் முன் வைத்த வாதங்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டன. அரசுகள் தங்கள் கொள்கை முடிவுகளை மக்களில் இருந்து எடுக்கவில்லை, பொய்கள், புனைவுகள்.. இதை இனங்கண்டு இருந்த எனக்கு – என் வீட்டுக்குள், அரசு வைரசை வலிந்து கொண்டு வந்தது.

நான் 15.03.2020 முதல் என்னைத் தனிமைப்படுத்தி இருந்த காலம். அதற்கு முதல் ஒரு மாதமாகவே எச்சரிக்கை உணர்வோடு சூழலை எதிர்கொள்ளும் எச்சரிக்கை போராட்டத்தை நடத்தியவன். வீட்டில் என்னுடன் இருக்கும் இரு பிள்ளைகள் வெளியில் செல்லவில்லை.எனது துணைவியார் கட்டாயம் வேலை செய்ய வேண்டி இருந்தது. சுப்பர்மாக்கற் விற்பனையாளர். இந்தியாவில் ஊரடங்கு அறிவித்த பின் மக்கள் வீதியில் நடந்தது போல், இங்கு சூப்பர்மார்க்கெட் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்கு விதியையும் முன் வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது.காற்றோட்டமற்ற மூடிய கட்டிடம், நெருக்கமாக மக்கள் .. எந்த சுகாதார ஒழுங்கும் கிடையாது, சந்தைக்கு ஏற்ப வைரஸ் பரவல் கொள்கை. இப்படித்தான் வைரஸ் என் வீட்டுக்குள் வந்து சேர்ந்துள்ளது. எம் வீட்டில் உள்ள நால்வருக்கும் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்றுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.எனது உடல் நிலை தீவிரம் காரணமாக மருத்துவரை சந்திப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காகவும் (07.04.2020) 6 கி.மீ நடந்து (இரண்டு மணி நேரம்) வெளியே சென்றேன். 500க்கு மேற்பட்ட மக்களை வீதிகளில் காண முடிந்தது. எந்தப் பரிசோதனையம் கிடையாது. இதன் பொருள் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பது தான்.

எனக்கு வைரைஸ் தொற்று சந்தேகம் – உறுதிப்படுத்தப்பட்ட சூழல், மற்றவர்களுக்கு பரவலைத் தடுக்க முகத் தடுப்பு கிடையாது. வைத்தியர் அதை எனக்கு கொடுக்கும்படி கூறிய போதும், அதைப் பெற முடியவில்லை. தொற்று என் வீட்டில் உறுதியான நிலையில், காய்ச்சல் மருந்து வாங்க நாங்களே நடந்து செல்ல வேண்டும். இதை விட மாற்று எம்முன் கிடையாது.எனக்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரண்ட இருமல். தலையிடி, தலைப்பாரம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடல் உதறல், இருமி துப்பும் போது இரத்தம் கலந்த சளி , உடம்பெங்கும் உளைவு, காய்ச்சல், கண் எரிவு, கண் நோவு, கண்ணீர் வெளியேறல், மூட்டு நோவு .. இவை கடந்த 5 நாட்களாக கூடிக் குறைந்தளவில் வெவ்வேறளவில் காணப்பட்டது, காணப்படுகின்றது.மருத்துவர் இனி வரும் நாட்கள் தான் கவனம், சுவாசப்பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள கூறி உள்ளார். ஒருவர் மரணித்தால் தான், இடம் கிடைக்கும் என்ற நிலை. மருத்துவமனைகள் முட்டி வழிகின்றது. மருத்துவ உதவி அலட்சியப் படுத்தப் படுகின்றது. முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப் படுகின்றனர்.அரசின் கொள்கையால் வைரஸ் தொற்று தொடர்ந்து பரவிக் கொண்டு இருக்கின்றது. என் வீட்டுக்குள் நாலு பேருக்கு தொற்று ஏற்பட்டது போல்.

இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை.

குறிப்பு : யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த மருந்து, இந்த மருந்து என, யாருக்கும் – யாரும் உபதேசம் செய்யாதீர்கள். சமூகத்தை முதன்மைப்படுத்திச் சிந்தியுங்கள். இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும் அக்கறை கொள்ளுங்கள். வதந்திகளை, வாந்திகளை, நம்பிக்கைகளை கைவிட்டு, பகுத்தறிவோடு மனிதனாக சிந்திக்கவும் – வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நாளைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும்.” என்று பதிவிட்டுள்ளார்.