ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டர் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் இவற்றை பதிவு செய்வது தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகளில் ‘பார்க்கோடு’ இடம் பெற்றிருக்கும். பார்கோடை ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேசிஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் இந்த வகை நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்தும்போது வாகனங்களை திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது ஆகியவற்றுக்கும் இத்தகைய நம்பர் பிளேட்டுகள் உதவும்.எனவே, ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படாத நிலையில் ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களுக்கான பதிவு தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. அதற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களின் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன