கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை முறையை மேற்கொள்ள கேரள அரசுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதியளித்துள்ளதை அடுத்து தமிழக அரசும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசிற்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் கண்டறியப்பட்டு 4 மாதம் ஆன நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டறியப்படவில்லை. மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, நோயை கட்டுப்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்தாலும் அது இன்னும் நிரூபிக்கப்படாத சோதனையாகவே உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மாற்று வழியான பிளாஸ்மா சிகிச்சை முறையை கையாள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதாவது, ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சையளிக்கும் முறையாகும்.ஒருவர் உடலில் கொரோனா வைரஸ் தொற்றும்போது, அதற்கு எதிரான தனி நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன. உதாரணமாக அம்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கு மீண்டும் அதே நோய் வராது. அதற்கு காரணம் பிளாஸ்மாவில் கலந்துள்ள நோய் எதிர்ப்பு செல்கள் தான்.
அந்த செல்கள் நோய் தொற்றிய நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தில் கலந்துவிடுகின்றன. பின்னர் அவை, வைரசை அழிக்கும் திறனை பெறுகின்றன. அப்படியான நோய் எதிர்ப்பு செல்கள் உள்ள பிளாஸ்மாவை கொரோனா நோயிலிருந்து மீண்டவரின் ரத்தத்தை தானமாக பெற்று அதிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். பிரித்த பிளாஸ்மாவை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும்போது, அவரது உடலிலும் கொரோனா வைரஸ் அழிக்கும் திறன் பெற்று குணமடைவர்.
இவை டாக்டர்களின் கூற்று.எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அல்லது குறைவான அறிகுறிகளை கொண்டவர்களை எளிதாக கண்டறிந்து, அவர்களிடம் ரத்தத்தை தானமாக பெற வேண்டும். அமெரிக்கா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில், இந்தியாவில் இந்த முறையைச் சோதனை செய்யக் கேரளா முடிவெடுத்துள்ளது. கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, கர்நாடகாவும் அனுமதி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகமும் அனுமதி கோரும் என எதிர்பாக்கப்படுகிறது.
