தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் அதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 1 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டில் தனியார் மூலம் முதல் முறையாக டெல்லி – லக்னோ இடையே ‘தேஜஸ்’ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த ரயிலில் பயணியருக்கு அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் இயக்குனர் ரஜ்னி ஹசீஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேஜஸ் ரயிலில் பயணம் செய்யும் போது வீட்டின் பாதுகாப்பு பற்றி பயணியர் கவலைப்படாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தேஜஸ் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் திருட்டு போனால் அதற்கு 1 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்காக பயணிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்ற அவர், இந்த திட்டத்தின்படி திருட்டு போனது பற்றி போலீசில் புகார் பதிவு செய்ய வேண்டும். திருட்டு நடந்தது உண்மை என தெரிந்தால் அதற்கான காப்பீடு தொகையை ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கும் என்றார்.