தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதிக்குள் வெளியிட்டு, அதனை நடத்துவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலனை செய்து விசாரித்த நீதிமன்றம், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை அக்டோபர் இறுதி வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட்டு அதற்கான தேதியை வெளியிட வேண்டும்’’ என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையேற்று, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் உறுதியளித்தன.

எனவே, இந்த மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏதாவது அறிவிப்பு மாநில அரசு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வார்டு வரையறை பணி அனைத்தும் முடிந்து விட்டது. இதில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தற்போது தேர்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது திரும்பி வரும் என தெரியாது என்பதால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கூடுதலாக மேலும் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு இல்லை என  தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிட்டு அதன் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை தற்போது மீறும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் உறுதியளித்தபடி தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தீபாவளி விடுமுறைக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதலாக 4 வாரம் அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்தனர்.