மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து லைசென்ஸ் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு ‘8’ அல்லது ‘S’ போட்டால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில சோதனை முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் (HAMS) என்ற தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றி, அதை வாகன ஓட்டிகளின் முன்பக்கமாய் பொருத்துகின்றனர். இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும், வாகனைத்தை பின்நோக்கி சென்று நிறுத்துதல் (ரிவர்ஸ் பார்க்கிங்), ‘S’ வடிவத்தில் வளைந்து ஓட்டுவது போன்றவற்றையும் சரியாக சோதிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது. சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையால், ஓட்டுநர்களை மதிப்பீடு செய்வது எளிதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.