நடந்து கொண்டிருக்கும் 15வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய சினிமா போட்டியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது தமிழ் திரைப்படமான ‘நாங்கல் நாங்கல் படத்தின் கதை 1990களில், ஊட்டியில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் வசித்து வரும், ராஜ்குமார் (அப்துல் ரஃபே), பத்மா (பிரார்த்தனா ஶ்ரீகாந்த்) பிரிந்து வாழும் தம்பதியினர். இவர்களின் குழந்தைகளான கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய மூவரும், மிகவும் கண்டிப்பான அப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் தோழனாக கேத்தி (ராக்ஸி) எனும் நாயும் இருந்து வருகிறது. ஊட்டியில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி கொண்டு, சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் ராஜ்குமார் கரண்ட் பில் கூட கட்ட முடியாத, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த நிலைக்கு அவர் வர காரணம் என்ன? தம்பதியினர் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதை மூன்று சிறுவர்களின் உணர்ச்சிப் போராட்டத்தை, உணர்வுபூர்வமாக சொல்வது தான், நாங்கல் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
100 சதவிகிதம் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும். என நினைக்கும், ராஜ்குமார் என்ற வாழ்ந்து கெட்ட, விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதரின் கதாபாத்திரத்தில், அப்துல் ரஃபே சிறப்பாக நடித்திருக்கிறார். அவர், சிறுவர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவருடைய சூழல் கரண்ட் பில் கூட கட்டமுடியாத கையறு நிலையில் அவர் தவிக்கும் காட்சிகள், அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது.
ராஜ்குமாரின் மனைவியாகவும், மூன்று சிறுவர்களின் அம்மாவாகவும் பத்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரார்த்தனா எஸ், சில காட்சிகளில் நடித்திருந்தாலும் கவனம் பெறுகிறார்.முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக் எம்), கௌதம் ( நிதின் டி) ஆகிய மூவருமே சிறப்பாக நடித்துள்ளனர். மூத்த பையனாக குடும்ப பொறுப்பினை ஏற்கும் மிதுன் கதாபாத்திரம் அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது. குறும்புக்கார சிறுவனாக நிதின் டி, தனது அப்பாவின் ஷேவிங் பிரஷ்ஷை, டாய்லெட் தண்ணீரில் முக்கி எடுக்கும் காட்சி, சிரிப்பினை வரவழைத்தாலும், கள்ளம் கபடமற்ற, அந்த பிஞ்சு உள்ளத்தின் வெளிப்பாடு, கண்டிப்பான தந்தைகளின் மீது இருக்கும் கோபத்தினை வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது. கடைக்கு சென்று வரும் சிறுவன் ரித்திக் எம் நடிப்பும் சிறப்பு தான். மூன்று சிறுவர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களிடம் சிறப்பான நடிப்பினை வரவழைத்த, இயக்குநர் அவினாஷ் பிரகாஷை பாராட்டித்தான் ஆகணும்.
கடுமையான பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு தந்தை, துள்ளித்திரிந்து விளையாட வேண்டிய வயதில், அம்மாவை பிரிந்து, கண்டிப்பான தந்தையிடம் சிக்கித்திணறும் மூன்று சிறுவர்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையினை எப்படி அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை, அவர்களின் உணர்ச்சிப்போராட்டத்தை, சற்றே இயல்பாக சொல்லியிருக்கிறார், அறிமுகஇயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.