“சென்னை ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் `ஷாசன் பஜார்’ நிகழ்ச்சி”

சென்னை, தி. நகரில் உள்ள ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் `ஷாசன் பஜார்’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இக்கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக 100க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்திருந்தனர். இந்த ஸ்டால்களை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் நம்பர் 1 முடி அலங்கார மற்றும் அழகு நிலையமாக திகழும் நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல் துவக்கி வைத்தார். இந்த ஆண்டிற்கான ஷாசன் பஜார் ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் இருந்தது.இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவிகளின் தொழில் தொடர்பான உத்வேகம், படைப்பாற்றல் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பல்வேறு தொழில் வாய்ப்புகளை மாணவிகள் பயன்படுத்த ஊக்குவிக்கிறது, இதன் மூலம் தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் பொருளாதார வளர்ச்சியை வழங்குகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி, இளம் பெண்களின் தொழில்முனைவோர் திறன்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் தொடர்புத்திறன், காட்சிப்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாக திறன்களையும் கவுரவிக்கிறது. ஒரு தொழில்முனைவோராக இருப்பதற்கான உண்மையான உணர்வைத் தருவதையும் ஒரு தொழில்முனைவோர் வாழ்க்கை பாதையில் பணியாற்ற அவர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக இந்நிகழ்ச்சி கொண்டுள்ளது.

இக்கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு துறையின் `ஷாபாஸ்’ மூலம் மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஷாசன் பஜார் மூலம் அவர்கள் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் அவர்கள், தங்கள் தயாரிப்புகளை திறம்பட சந்தைப்படுத்தவும் வழிவகை செய்கிறது. மேலும் இக்கல்லூரி மாணவிகள் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு உதவி செய்வதோடு, அவர்களுக்கு தொழில்முறை அபாயங்களையும் விளக்கி, அதற்கேற்றவாறு அவர்களை தயார்படுத்துகிறது. எதிர்காலத்தில் மாணவிகள் ஊழியர்களாக பணியாற்றுவதைக்காட்டிலும் முதலாளிகளாக இருக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஷாபாசின் மற்றொரு பிரதான நோக்கம் சமூக தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். இதன் காரணமாக ஷாசன் ஜெயின் கல்லூரி, காஞ்சீபுரம் அருகே உள்ள கலியனூர் கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்துள்ளது. சுய மற்றும் குழு வேலை வாய்ப்பு மூலம் தங்கள் திறனை நிரூபிக்க விரும்பும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய கலியனூர் கிராம பெண்களுக்கும் மற்றும் பிற பெண்களுக்கும் இந்த ஷாசன் பஜார் இடத்தை வழங்குவதோடு, ஊக்கத்தையும் வழங்கி உள்ளது. இந்த பெண்கள் குழு, தொண்டு நிறுவனங்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். தூய்மை பாரத திட்டத்தோடு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான தனது முழு ஆதரவையும் இந்த ஷாசன் பஜார் அளித்துள்ளது.

இக்கல்லூரியில் ஷாசன் பஜார் 9-வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. முந்தைய ஆண்டுகளின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இடையே ஷாசன் பஜார் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவிகள் குழுவாக இணைந்து 100க்கும் மேற்பட்ட ஸ்டால்களை இந்த பஜாரில் அமைத்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர் பங்கேற்றனர்.இந்த ஷாசன் பஜாரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், காலணிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான பொருட்கள், ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள், எழுது பொருட்கள், மாநில பாரம்பரிய பொருட்கள், கைப்பை உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள், பிரத்யேக, அறிவுசார் விளையாட்டுகள், பயமுறுத்தும் வீடு, போட்டோ பூத் மற்றும் 6 விதமான உணவு வகைகளை விற்பனை செய்யும் ஸ்டால்கள் உள்ளிட்ட பல்வேறு ஸ்டால்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.